Friday, 13 February 2015

மஹாசிவராத்திரி - ஈசனுடன் ஓர் இரவு!- தினமலர்

இந்திய கலாச்சாரத்தில், ஒரு காலத்தில், ஒரு வருடத்துக்கு 365 பண்டிகைகள் கொண்டாடப்பட்டன. அதாவது வருடத்தின் அனைத்து நாட்களிலும் பண்டிகைகள் கொண்டாடுவதற்கு அவர்களுக்கு ஏதாவது ஒரு காரணம் தேவைப்பட்டது. இந்த 365 நாட்களும் வாழ்க்கையின் பல்வேறு காரணங்களோடும், பல நோக்கங்களோடும் தொடர்புபடுத்தப்பட்டிருந்தன. பல வரலாற்று நிகழ்வுகளையும், வெற்றிகளையும் குறிக்கும் விதத்திலும், வாழ்க்கையின் நிகழ்வுகளான விதை விதைத்தல், அறுவடை செய்தல்... இவற்றுக்கெல்லாம் பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டன. ஆனால் மகாசிவராத்திரிக்கு ஒரு தனி மகத்துவம் உள்ளது. 

இது ஆன்மீகப் பாதையில் இருக்கும் மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள். குடும்பத்தில் இருக்கும் மக்களுக்கும் இது முக்கியமான நாள்தான். மேலும் இந்த உலகத்தில் இருக்கும் அத்தனைக்கும் ஆசைப்படும் ஆட்களுக்கும் இந்த நாள் மிக முக்கியமானதாக இருக்கிறது.

சிவா என்று சொல்லும்போது, அவர் அனைத்தையும் தாண்டிய ஒரு கடவுள் என்றுதான் பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். அவர் வாழ்க்கையை விவரிக்கும் சிவபுராணத்தைப் பார்க்கும்போது, ஒரு மனிதனுக்கு நிகழும் அத்தனையுமே அவருக்கும் நிகழ்ந்திருக்கிறது. ஒரே நேரத்தில் அவர் பலவிதமான தன்மைகளுடன் இருந்திருக்கிறார். ஒரே சமயத்தில் அவர் மிக அழகானவராக, மிக அசிங்கமானவராக, மிக ஒழுக்கமானவராக, குடும்பஸ்தராக, குடிகாரராக, போதைக்கு அடிமையானவராக, நடனத்தின் தலைவராக, அசைவற்றவராக இருந்திருக்கிறார். கடவுளர்கள் அவரை வழிபட்டனர்; கணங்களும் அவரை வழிபட்டனர்; இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை வகையான உயிர்களும் அவரை வழிபட்டன.

அவர் இப்படியெல்லாம் சித்தரிக்கப்பட்டிருப்பதற்கு ஒரு காரணம் என்னவென்றால், இத்தனை சிக்கலான, கலவையான தன்மைகளை உடைய ஒரு மனிதரை உங்களால் இந்த உலகத்தில் காண முடிந்தால், இந்தத் தன்மைகளையெல்லாம் பிரபஞ்சத்தில் பார்க்க முடிந்தால், அது அழகாகவோ அல்லது அசிங்கமாகவோ, அது சிறந்ததாகவோ, சாதாரணமாகவோ, அது சொர்க்கமோ அல்லது நரகமோ, எதுவாக இருந்தாலும், நீங்கள் வாழ்க்கையைக் கடந்துவிட்டீர்கள் என்று பொருள். ஒரே நேரத்தில் மிக அழகானவராகவும், மிகக் கொடூரமானவராகவும் இருக்கும் இந்த மனிதரை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிந்தால், நீங்கள் வாழ்க்கையை வெகு சுலபமாகக் கடந்துவிட்டீர்கள். நம் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்களுக்கெல்லாம் காரணம், எது அழகு, எது அழகில்லை, எது நல்லது, எது கெட்டது என்று எப்போதும் பிரித்துப் பார்க்க முயற்சிப்பதுதான். சிவா என்பவர் இவை அத்தனையையும் ஒன்று சேர்த்து உண்டான கலவையாக இருப்பவர்.

குடும்பஸ்தர்களாக இருப்பவர்கள், மகாசிவராத்திரியை சிவாவின் திருமண நாளாகக் கொண்டாடுகிறார்கள். ஆன்ம ஞானிகள், இந்த நாளில்தான் சிவா கைலாஷ் மலைகளுடன் அவரும் ஒரு மலையாகக் கலந்துவிட்டார் எனவும், அசைவற்ற நிலையை அடைந்துவிட்டார் எனவும் கூறுகிறார்கள். பல லட்சம் ஆண்டுகள் தியானம் செய்த பின், ஒரு நாள் அவர் முற்றிலும் அசைவற்ற தன்மையை அடைந்துவிட்டார். அவருடைய அத்தனை அசைவுகளும் நின்றுவிட்டன. அவர் முற்றிலும் அசைவில்லாத தன்மையை அடைந்துவிட்டார். அதனால்தான் ஆன்மஞானிகள் சிவராத்திரியை அசைவற்ற தன்மையின் நாளாகக் கொண்டாடுகின்றனர். தேடலில் உள்ளவர்கள், இந்த நாளை, சிவா தன் எதிரிகளை வெற்றி கொண்ட நாளாகக் கொண்டாடுகின்றனர். புராணக் கதைகளில் எப்படி இருந்தாலும், மகாசிவராத்திரியின் முக்கியத்துவம் என்னவென்றால், அன்றைய தினம் மனித உடலில் இருக்கும் சக்திகள் இயல்பாகவே மேல் நோக்கி எழுகின்றன.

முதுகெலும்பு நேராக இருப்பவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. உங்கள் முதுகெலும்பு குறுக்குவசத்தில் இருந்தால், அதை உங்களால் பயன்படுத்திக் கொள்ள முடியாது, ஆனால் முதுகுத்தண்டு நேராக இருப்பவர்கள், தங்களது சக்திகளை மேல்நோக்கி, அதிக முயற்சிகள் இல்லாமல் உயர்த்தும் பேறு பெற்றவர்கள். ஆகவேதான் மகாசிவராத்திரியன்று இரவில் நாம் விழிப்புடன் இருந்து, விழிப்புணர்வுடன், நம் முதுகெலும்புகளை நேராக வைத்துக் கொண்டிருந்தால், நாம் எந்த வகையான சாதனாவைச் செய்தாலும், இந்த தினத்தில் நமக்கு இயற்கையிடமிருந்து மிகப் பெரிய உதவிகள் கிடைக்கும். அதன் மூலம் நம் சக்திகள் இயல்பான முறையில் மேல்நோக்கி நகரும். மனிதனின் பரிணாம வளர்ச்சிகள் அத்தனையும் அடிப்படையில் மனிதனின் சக்திகள் மேல்நோக்கி நகர்ந்ததால்தான் நிகழ்ந்தது. ஒரு ஆன்மீகவாதி தான் செய்யும் ஒவ்வொரு பயிற்சியையும், ஒவ்வொரு சாதனாவையும் அவரது சக்திகளை மேல்நோக்கி நகர்த்துவதற்காகத்தான் செய்கிறார். ஒரு பௌதீக உயிராக இருப்பதிலிருந்து இதை ஒரு ஆன்மீக செயல்பாடாக மாற்றுவதற்கு, சக்திகள் மேல்நோக்கி நகர வேண்டியது அவசியமாகிறது.

நாம் இங்கு இருக்கும்போது, இயற்கையில் குறிப்பிட்ட அம்சங்களை மட்டும் பூர்த்தி செய்வதற்கு முயற்சிப்போம். அதாவது இந்த ஸ்தூல உடல் என்பது இயற்கையில் ஒரு அம்சம்தான், அதை வைத்துக் கொண்டு நாம் உயிர்வாழ்வதையும், இனப்பெருக்கம் செய்வதைப் பற்றியும் மட்டும்தான் சிந்திப்போம். பிரபஞ்சத்தின் பௌதீக பரிமாணத்துக்கு இந்த இரண்டு நோக்கங்களைத் தவிர வேறெந்த நோக்கங்களும் உண்மையில் இல்லை. இந்த பூமியில் இருக்கும் மற்ற அத்தனை உயிரினங்களையும் பார்த்தால், அவை அனைத்துமே உயிர் வாழ்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும்தான் தொடர்ந்து முயற்சிக்கின்றன என்பது புரியவரும். இதன் மூலம் அவற்றின் வாழ்க்கை தொடர்ந்து நடக்கிறது. ஆனால் நீங்கள் மனிதர்களாக இருப்பதால், வெறுமனே வாழ்க்கையை நடத்துவது மட்டுமே நிறைவைத் தராது என்று புரிந்து கொள்வீர்கள். நீங்கள் வேறு ஒரு உயிரினமாக இருந்திருந்தால், அப்படி வாழ்வதே போதுமானதாக இருந்திருக்கும், ஆனால் உங்களுடைய முதுகுத்தண்டு நேராக இருப்பதால், அப்படி வாழ்க்கையை வாழ்வது உங்களுக்குப் போதுமானதாக இல்லை. ஆகவே இந்த மகாசிவராத்திரி நாளில், வாழ்க்கையின் பௌதீகப் பரிமாணங்களைக் கடந்து, உங்களுக்குள் இருக்கும் தெய்வீகத்தை உணர்வதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு.

-------------------------------------------------------------------------------------------------------------------
மஹாசிவராத்திரி திருவிழா

No comments: