அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் 5 விழுக்காடு இடம் ஏழை மாணவர்களுக்காக ஒதுக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுகிறது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் அங்கீகாரம் பெற்றுள்ள அனைத்துப் பொறியியல் படிப்புகள், பட்டயப் படிப்புகள் அனைத்துக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.
இந்த ஏழை மாணவருக்கான 5 விழுக்காடு ஒதுக்கீடு எண்ணிக்கையை நிரப்புவதற்காக அந்தக் கல்லூரிகளுக்கு ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் அனுமதிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கையிலிருந்து கூடுதலாக 5 விழுக்காடு எண்ணிக்கையை உயர்த்தி ஏழை மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மற்ற கட்டணங்களை அவர்கள் செலுத்தித்தான் ஆக வேண்டும்.
இந்த கல்விக் கட்டண விலக்களிப்புத் திட்டத்தில் (ட்யூஷன் ஃபீஸ் வைவர் ஸ்கீம்) பயன்பெற ஒரே தகுதி, பிளஸ் 2 தேர்ச்சியும், குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்கு உள்ளாக இருக்க வேண்டும் என்பதும்தான்.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அளிக்கப்பட்டிருப்பதும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் செய்வதைப் போலவே, கல்விக் கட்டணத் தள்ளுபடி திட்டத்திலும் மாணவர்கள் விண்ணப்பம் செய்து, இடம் கிடைக்காதபோது பொது ஒதுக்கீட்டில் பங்கேற்க வகை செய்யப்பட்டிருப்பதும் பாராட்டுக்குரியவை. ஆனால், மிகவும் நெருடலான விவகாரம்-குடும்பத்தின் ஆண்டு வருவாய் ரூ.4.5 லட்சம் என்பதுதான்.
அதாவது மாத வருமானம் ரூ.37,500-க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்கிற இந்த நிபந்தனையை தமிழ்நாட்டில் 40 சதவீதம்பேர்தான் பூர்த்திசெய்வார்கள். அவர்களுக்கு ஒதுக்கீடின் அவசியம் இல்லை. உண்மையாகவே இந்தத் திட்டத்தால் பயன்பட வேண்டியவர்கள் ஏறத்தாழ 60 விழுக்காடு உள்ள பெருவாரியான ஏழை மற்றும் கீழ்மத்தியதர வகுப்பினர்தான். இவர்களது மாத வருமானம் அதிகபட்சம் ரூ. 15,000-மாகத்தான் இருக்கும்.
ஐந்து நபர்கள் உள்ள ஒரு குடும்பத்தின் மாத வருமானம் ரூ.6500-க்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்தை வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பமாகக் கணக்கிடலாம் என்கின்றது திட்டக் கமிஷன். ரூ.6500 எங்கே, ரூ.37,500 எங்கே!
வங்கிகள் வழங்கும் கல்விக் கடனுக்கு வட்டித் தள்ளுபடிக்குக் குடும்பத்தின் ஆண்டு வருவாய் ரூ.4 லட்சமாக இருக்கிறது. இதிலும்கூட பயன்பெறுவோர் உண்மையிலேயே ஏழைகள் அல்ல என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். ஆண்டுவருவாய் ரூ.4.5 லட்சத்துக்குள் இருக்கும் அனைத்து மாணவர்களையும் ஒன்றாக ஒரு தொகுப்பில் சேர்த்து, "கட்-ஆஃப்' மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுமேயானால், இதில் ஏழைகள் நிச்சயமாகப் பயன்பெற மாட்டார்கள்.
இத்திட்டத்தின் கீழ் மாணவர்களைக் கலந்தாய்வுக்கு அழைக்கும்போது, கல்லூரித் தேர்வுக்காக அவர்களை அழைக்கும் வரிசையை குறைந்தபட்ச குடும்ப வருமானம் உள்ள மாணவர்களிலிருந்து தொடங்க வேண்டும். உதாரணமாக, இத்திட்டத்தின் கீழ் "கட்-ஆஃப்' மதிப்பெண் 195-க்கான கலந்தாய்வில் மாணவர்கள் பங்குகொள்ளும்போது, மாணவர்களின் குடும்ப வருமானத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு, மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
இத்துடன் கூடுதல் தகுதியாக, அரசுப் பள்ளிகளில், தமிழ் வழிக் கல்வி பயின்ற மாணவர்களுக்காக இந்த 5 விழுக்காட்டை ஒதுக்குவது என்ற முடிவை அரசு மேற்கொள்ளுமானால், இன்னும் சாலச் சிறந்த திட்டமாக அமையும்.
இத்திட்டத்தின் கீழ் கல்லூரிகளைத் தேர்வு செய்யும் மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் தரமான கல்லூரிகளுக்கே முன்னுரிமை அளிப்பார்கள். அப்படியாகச் சேரும்போது, வெறும் கல்விக் கட்டணத் தள்ளுபடி மட்டுமே போதுமா? உண்மையான ஏழை மாணவர்களால் தரமான கல்லூரி எனப் புகழ்பெற்ற இந்த நிறுவனங்கள் வசூலிக்கும் மற்ற கட்டணங்கள் குறைந்தது ஆண்டுக்கு ரூ.50,000 ஆகுமே. இத்திட்டம் ஏழை மாணவர்களுக்கு கொஞ்சம் சிரமத்தைக் குறைக்கிறது என்று மகிழலாமே தவிர, முழு கட்டணங்களையும் ரத்து செய்யாதவரை, ஏழைக்கு உயர்கல்வி கசப்பானதாகவே இருக்கும்.
இந்த திட்டம் அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகின்றது என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் உறுப்பினர், செயலர் கே.பி.ஐசக் சொல்லும்போதே, கோவை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற தனியார் கல்லூரிகள் கூட்டமைப்பின் தலைவர் எதிர்ப்புக் குரல் எழுப்பிவிட்டார். ஏற்கெனவே சேருவதற்கு மாணவர்கள் இல்லாத நிலை. நிறைய இடங்கள் காலியாக இருக்கின்றன. இதில் இது வேறா? என்று கேள்வி எழுப்புகின்றார்.
கலந்தாய்வில் சீந்துவார் இல்லாத கல்லூரிகள் இந்தக் கூடுதல் ஒதுக்கீடு குறித்து கவலைப்பட வேண்டியதே இல்லை. அப்படியில்லாமல், மாணவர்கள் ஆர்வமாகத் தேடி வந்து, போட்டியிட்டுச் சேரும் கல்லூரி என்றால் அவர்கள் இழக்கப்போவது வெறும் கல்விக் கட்டணம் மட்டுமே.
ரூ. 37,500 மாத வருமானத்துக்குக் கீழே உள்ளவர்கள் ஏழை மாணவர்களாகக் கருதப்பட்டு இந்த இடஒதுக்கீட்டுக்குத் தகுதி பெறுவார்கள் என்றால், தனியார் கல்வி நிறுவனங்கள் அந்தத் தகுதியைக் காரணம் காட்டி குறைந்த மதிப்பெண்கள் உள்ள கணக்குக்காட்டாமல் நன்கொடை வழங்கத் தயாராக இருப்பவர்களுக்கு இடமளித்து தங்களது நிர்வாக ஒதுக்கீட்டு அளவை மறைமுகமாக அதிகரித்துக்கொள்ளத்தான் அது உதவக்கூடும். அதனால், குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ. 1.8 லட்சமாகக் குறைத்து இந்த 5 சதவிகித ஏழை மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு மறுநிர்ணயம் செய்யப்பட வேண்டும். இல்லையென்றால், இந்த ஒதுக்கீட்டால் எந்தவிதப் பயனும் ஏழைகளுக்கு இருக்காது.
நன்றி தினமணி
No comments:
Post a Comment