கனிமொழி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஆம், அவர் ஜாமீனில் வெளிவரவில்லை. இப்படித்தான் திமுக கம்பெனி மகிழ்ச்சியில் பேயாட்டம் ஆடுகிறது. ஊழல்வாதி கனிமொழி தியாகியாவது திராவிட வரலாற்றில் புதியதல்ல. திராவிட வரலாறு என்பதே ஊழல் வரலாறும் பொய்ப் பித்தலாட்ட வரலாறும்தான்.
நாயாய் பேயாய் அலைந்தான் என்பார்களே, அப்படி அலைந்தது இந்த கம்பெனி. நீதிபதியின் காலில் கம்பெனிக்காரர்கள் யாராவது விழுந்தார்களா என்பதை அலசவேண்டும்! தன் தலைவரின் மகளின் தாயார் ராசாத்தி அம்மாள் பத்திரிகைகளுக்குக் கொடுத்த பேட்டிகளெல்லாம் நினைவுக்கு வருகின்றன. இனி இந்த கம்பெனியின் தலைவர் தனது மகளின் தாயாரிடம் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என்பதுதான் திமுக கம்பெனியின் தொண்டர்களின் கருத்தாக இருக்கிறது. நல்ல கம்பெனி, நல்ல தொண்டர்கள்.
இந்தியாவின் முதல்நிலை வழக்கறிஞர்கள் எல்லாம் வாதிட்டார்கள். எப்படியாவது கனிமொழிக்கு ஜாமீன் வாங்கவேண்டும் என்பதுதான் கம்பெனி எம்டியின் ஒரே லட்சியமாக இருந்தது. கம்பெனியின் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் வானத்தில் டெல்லிக்கும் சென்னைக்குமாகப் பறந்துகொண்டிருந்தார்கள். அத்தனைபேரும் திராவிட வரலாற்றின் புதல்வர்களே என்பது முக்கியமான தகுதி.
எப்படி ஒரு பெண்ணால் தன் மகனைக் கவனித்துக் கொள்ளாமல் ஜெயிலில் இருக்கமுடியும் என்றெல்லாம் சோக காவியம் தீட்டி அனுப்பினார்கள். 60களாக இருந்தால் மனோகரி ரேஞ்சுக்கு கம்பெனி எம்டி பெரிய வசன காவியமே தீட்டி அனுப்பியிருப்பார். நீதிபதியும் பயந்துபோய் ஜாமீன் கொடுத்தாலும் கொடுத்திருப்பார். ஆனால் 60கள் அல்ல. நாடகம் நடப்பது தமிழ்நாட்டிலும் அல்ல.
சிங்கத்தின் வாயைத் திறந்து தலையைத் தானே வைத்துக்கொண்டது போல, காங்கிரஸ் வாயைத் திறந்து தலையை வைத்த திமுக கம்பெனிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பலரின் தலையை ஆட்டையைப் போடுவதையே வேலையாகக் கொண்ட காங்கிரஸ் வெஞ்சினம் தீர்த்தது. சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்துக்கொண்டே இருந்தார் எம்.டி கருணாநிதி. ஆனால் அவர் ஜாமீன் விஷயம் குறித்து மட்டும் சோனியாவிடம் கேட்டிருக்கவே மாட்டார். கம்பெனி அறிக்கை அப்படித்தான் சொல்லுகிறது. 67ல் காங்கிரஸை அழித்தீர்கள், 2011ல் திமுகவை அழிக்கிறோம் என்றுதான் காங்கிரஸ் செயல்பட்டது. கண்ணைக் குத்திவிட்டானே என்று கதறுவதற்குப் பதிலாக, தங்க ஊசியில்தானே குத்தியிருக்கிறான் என்று பாராட்டும் நிலையில் இருக்கிறது திமுக. மறக்காமல் திமுக செய்யும் ஒரே வேலை, இன்னும் கூட்டணி இருக்கிறது என்பதுதான்! கூட்டணியும் இல்லாவிட்டால் எம்டி தனது மகள் கனிமொழியின் தாயாருக்கு என்னதான் பதில் சொல்வார் பாவம். நமக்கே பாவம் தோன்றியதல்லவா, இதுவே இச்சோக நவீனத்தின் வெற்றி எனலாம்.
தன் மகனை ஒருநாள் விடாமல் பார்த்துக்கொள்ள நினைக்கும் ஒரு தாய் முதலில் ஊழல் செய்யாமல் இருந்திருக்கவேண்டும். நேர்மையே தன் இலக்கு என்றிருந்திருக்கவேண்டும். சங்கமத்துக்காகவும், எம்பி என்று டெல்லிக்கும் சென்னைக்கும் அலைந்த நாள்களில் இந்தத் தனயன் பாசம் எப்படி இருந்தது என்று நினைத்துப் பார்க்கிறேன். அந்தத் தனையனை யார் கவனித்துக் கொண்டார்கள் என்று நினைக்கிறேன். பாட்டிகள் வளர்க்கும் பேரன்களின் எண்ணிக்கை நம் கலாசாரத்தில் எத்தனை எத்தனை இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். ஆனால் ஊழலில் மாட்டவும் தனயன் பாசம் முன்னுக்கு வந்துவிட்டது.
பெண் என்பதால் கருணை காட்டுங்கள் என்று அடுத்த சோகக் கட்டம். பெண் என்றிருந்தும் ஊழல் செய்யலாம். பெண் என்றிருந்தும் உள்கட்சி அரசியலில் ஆட்டிப் படைக்கலாம். கலைஞர் டிவியில் தன் பங்கு இல்லாவிட்டால் என்னாகுமோ என்று அஞ்சி, பெண் என்றிருந்தும் இயக்குநராகலாம். ஆனால் வயதைக் காரணம் காட்டி தயாளு என்கிற பெண்ணுக்கும், என்ன இருந்தாலும் பெண் என்று காரணம் காட்டி கனிமொழிக்கும் ஜாமீன் கேட்கவேண்டியிருக்கிறது. தயாளுவை உள்ளே வைக்காதது நீதிமன்றம் செய்த தவறு. எல்லாவற்றையும் கேள்வி கேட்ட நீதிமன்றம் வயதைக் காரணம் காட்டி தயாளுவை உள்ளே வைக்காமல் விட்டது தவறான முன்னுதாரணம்.
இதுபோல பல கட்சிகளில் பல வழக்குகளில் பல தனிமனிதர்கள் ஜாமீன் கிடைக்காமல் உள்ளே கிடக்கிறார்கள். அப்போதெல்லாம் நம் அறிவுஜீவிகள் வாயே திறக்கவில்லை. கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு என்றதும், பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியதென்ன, நீதிமன்றத்துக்கு அறிவுரைகள் சொல்லித் தள்ளியதென்ன, ஒருநாள்கூட ஒருவர் ஜெயிலில் இருக்கக்கூடாது என்ற தார்மீக நெறிகளைத் தூக்கிப் பிடித்ததென்ன, இன்னும் என்ன என்னவோ என்ன-கள், சொன்னால் ஔவையார் தோற்றுவிடுவார்!
இன்று இந்த வழக்கில் இப்படி கனிமொழி ஜாமீன் தரப்படாமல் உள்ளே இருந்தால் மட்டும் ஏன் இவர்களுக்கு இத்தனை அக்கறை? கேட்டால், இந்த வழக்கில்தான் ஊடக வெளிச்சம் கிடைத்திருக்கிறது, இதை வைத்துப் பேசி மற்ற எல்லா வழக்குகளுக்கும் இதுவே முன்மாதிரியாக அமையவேண்டும் என்றுதான் பேசுகிறோம் என்கிறார்கள். ஏன், இதைப் போல ஒரு நீதிமன்றமும், இந்த வழக்கில்தான் ஊடக வெளிச்சம் இருக்கிறது, எனவே இதனையே ஒரு முன்மாதிரியாக ஆக்கி, தேவையற்ற ஜாமீன்களை தரவேண்டாம் என்று முடிவெடுத்தால் என்ன தவறு? முதலில் கனிமொழிக்கு ஏன் ஜாமீன் தரவேண்டும் என்பதற்கான சரியான காரணங்களையே இவர்கள் முன்வைக்கவில்லை. சொன்னதெல்லாம் இழுவை மெகா சீரியல் காரணங்கள் மட்டுமே.
அவர் சாட்சிகளைக் கலைக்கமாட்டார் என்கிறார்கள். என்ன உத்திரவாதம்? தெரியாது. ஆனால் கலைக்கமாட்டார், அவ்வளவுதான். சொன்னா நம்பணும் மனோபாவம். கோர்ட்டில் எத்தனை அமைதியாக நடந்துகொண்டார் என்று ஒரு வாதம்! இப்படி எப்படி வெட்கமில்லாமல் சொல்கிறார்கள்? கோர்ட்டில் அமைதியாக நடந்துகொள்ளும் கொலைகாரர்களுக்கெல்லாம், ஊழல்வாதிகளுக்கெல்லாம் ஜாமீனா? இது ஒரு தகுதியா? கசாப்பை போல நீதிமன்றத்தில் அமைதியாக நடந்துகொண்ட இன்னொரு ஜீவன் உண்டா?
வேறெங்கும் ஓடிவிடமாட்டார் என்று ஒரு வாதம். எங்கேயும் ஓடாதவர் உள்ளேயே இருந்துவிடலாம்! இவர் வெளியில் வந்து எதையும் சாதிக்கப்போவதில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இதைச் சொன்னால் இது தார்மிகம் இல்லை என்பார்கள். என்னவோ கனிமொழி ஜாமீனில் வர இவர்கள் வைக்கும் வாதமெல்லாம் தார்மிகம் கொண்டது போலப் பேசுவார்கள்.
மகனைப் பார்த்துக்கொள்ள என்று ஒரு வாதம். இதுபோன்ற ஊழல்வாதிகளின் அரவணைப்பில் இல்லாமல் அப்பிஞ்சு வளர்வதே நியாயம் என்றால் ஏற்பார்களா என்ன? அம்மா பையன் செண்டியைப் போட்டு கதையை ஓட்டுவார்கள்.
இத்தனை தூரம் பேசுகிறார்களே… சாதிக் பாட்சாவைக் காப்பாற்றமுடிந்ததா இவர்களால்? அதைப்போல இன்னொரு அசம்பாவிதம் இந்த வழக்கில் நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்? அப்படி நடந்தால் இந்த அறிவுஜீவிகள் அதற்குப் பொறுப்பேர்களா? அசம்பாவிதம் நிகழலாம் அல்லது நிகழ்த்தப்படலாம். இதையெல்லாம் நினைத்துதானே நீதிமன்றம் ஜாமீன் மறுக்கிறது. ஆனால் அறிவுஜீவிகளுக்குத் தேவையெல்லாம் கனிமொழியின் ஜாமீன் மட்டுமே.
சரி, கனிமொழியின் ஜாமீன் வாதங்களை மற்ற கைதிகளுக்கும் விரிவுபடுத்தப் போகிறோமா? பெண் என்றால், பெண்ணுக்குக் குழந்தை இருக்கிறது என்றால், நீதிமன்றத்தில் அமைதியாக நடந்துகொண்டால், ஓடிவிடமாட்டார் என்றால், சாட்சிகளைக் கலைக்கமாட்டார் என்ற உறுதிமொழி தரப்பட்டால்… கட்டப்பஞ்சாயத்தில்கூட இதை நம்பமாட்டார்கள். ஆனால் நீதிமன்றம் இதனை நம்பிவிடவேண்டும். அறிவுஜீவிகள் உடனே இப்போது வழக்கை சிவில் என்றும் கிரிமினல் என்றும் பிரிப்பார்கள். தெரியாததா என்ன!
கனிமொழி ஜாமீனில் வெளிவந்ததையே என்னவோ வழக்கில் விடுதலையாகிவிட்டது போல கொண்டாடும் திமுக கம்பெனி, இவரைத் தியாகியாக்கி அமைச்சராக்கினாலும் ஆக்கலாம். எனவே நாம் உரத்துச் சொல்லவேண்டியிருக்கிறது. அம்மையார் வெளிவந்தது தியாக வழக்கில் அல்ல, திருட்டு வழக்கில் இருந்து. அதுவும் ஜாமீனில் மட்டுமே.
நீதிமன்றம் நிபந்தனைகள் விதித்திருக்கிறது. முக்கியமான நிபந்தனை, சாட்சிகளைக் கலைக்கப் பார்த்தால் ஜாமீன் ரத்தாகும் என்பது. இப்படி ஒரு மிரட்டலோடு வெளியே வருவதற்கு உள்ளேயே இருக்கலாம். இந்த ஊடக வெளிச்சம் விழுந்த வழக்கை வைத்து சில நெறிமுறைகளை முன்வைக்கப் பார்க்கும் அறிவுஜீவிகளில் ஒருவர்கூட, கனிமொழி ஜாமீன் கேட்காமல் தார்மிக நெறியை அரசியலில் ஏற்படுத்தவேண்டும் என்று கேட்கவில்லை. ஏனென்றால் இவர்கள் அறிவுஜீவிகள்.
இந்த அறிவுஜீவிகளுக்கும் கம்பெனி எம்டி கருணாநிதிக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை. ராசா இதுவரை ஜாமீன் கோரவில்லையே என்று கேள்வி கேட்டால், அவர் கேட்டால் நான் சொல்வேன் என்கிறார். ஆனால் கனிமொழிக்கு அலைந்தது என்ன ஒரு அலைச்சல்! பாசம் என்ற ஒரு வஸ்து பகுத்தறிவுக்குள் வராது போல.
ஊடக நிர்ப்பந்தத்தினால்தான் நீதிமன்றம் இந்தத் தேவையற்ற ஜாமீனைத் தந்துவிட்டது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அறிவுஜீவிகள் தங்கள் தான்தோன்றிக் கருத்துகளால் நீதிமன்றத்தை தன்வயப்படுத்த முடியுமோ என்ற அச்சத்தைத் தோற்றுவிக்கிறது இந்த ஜாமீன். மேலும் ஜாமீனில் வெளிவந்தவருக்கு ஏதேனும் நேர்ந்தால் அதில் நீதிமன்றத்துக்கும் பங்கிருப்பதாகவே கருதமுடியும். அதுமட்டுமல்ல, ஜாமீனுக்குச் சொல்லப்பட்ட குழந்தைத்தனமான காரணங்கள், முற்றிலும் தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்திவிடும். இத்தனை தவறுகளை முன்னிறுத்தி ஒரு ஜாமீன். இப்படி ஜாமீனில் வெளிவருவதற்கு உள்ளேயே இருந்திருக்கலாம் என்று ஓர் அரசியல்வாதி நினைப்பவராயிருந்தால், அவர் இதுபோன்ற ஓர் ஊழலைச் செய்திருக்கவே மாட்டார் என்பதும் உண்மையாக இருந்திருக்கும்.
நினைப்புக்கேற்ற பிழைப்பு, பிழைப்புக்கேற்ற பேச்சு. பிழைப்புவாதம்.
0
நன்றி அரவு
No comments:
Post a Comment