Monday, 19 December 2011

முல்லை பெரியாறும் கூடங்குளம் அணுமின் நிலையமும் : பிரச்னைகள் இரண்டு; காரணம் ஒன்று-


இரு வேறு பிரச்னைகளுக்காக நடந்து வந்தாலும், முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கும், கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டத்துக்கும் ஓர் அடிப்படை ஒற்றுமை இருக்கிறது. இரண்டுக்கும் பின்னணியில் இருப்பது, "பயம்'"முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும்' என, கேரள மக்கள் பயப்படுகின்றனர்.

"அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு ஏற்பட்டுவிடும்' என, கூடங்குளம் மக்கள் பயப்படுகின்றனர். "பூகம்பம் வந்தால் எல்லாமே போச்சு' என்கின்றனர் அவர்கள். "சுனாமி வந்தால் சின்னாபின்னமாகி விடுவோம்' என்கின்றனர் இவர்கள். இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் சிலர் இறங்கியுள்ளனர்.முல்லைப் பெரியாறு அணையின் வரலாறுகளைச் சொல்லி, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சுட்டிக்காட்டி, அணை உடையவே உடையாது என, சத்தியம் செய்கிறது தமிழக அரசு.

கூடங்குளம் அணுமின் நிலையம், சர்வதேசத் தரம் வாய்ந்தது எனக் கூறி, உலகத்தில் வேறெங்கும் மேற்கொள்ளப்படாத பாதுகாப்பு ஏற்பாடு எல்லாம் இங்கு மேற்கொள்ளப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது இந்திய அணுமின்சக்தி கழகம்.
முல்லைப் பெரியாறு பிரச்னையை, பொதுமக்களை விட அரசியல்வாதிகள் தான் அதிகம் தூண்டிவிடுகின்றனர். கூடங்குளத்தில், அரசியல்வாதிகள் மவுனம் காக்கின்றனர். அப்பகுதி மக்கள் தான் போராடி வருகின்றனர். தற்போது, முல்லைப் பெரியாறு பிரச்னையிலும் மக்கள் கொந்தளிக்கத் துவங்கி விட்டனர். தொடர் போராட்டங்களால், கேரளா எல்லையில் இன்னமும் கொதிப்பு அடங்கவில்லை.

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக, அப்துல் கலாமோ, மத்திய அரசோ, மந்திரி பிரதானிகளோ, யார் சொன்னாலும், அப்பகுதி மக்கள் கேட்பதாக இல்லை. மற்ற பகுதிகளை விட கூடங்குளம் பகுதி பாதுகாப்பானது என படம் போட்டு காட்டிவிட்டது மத்திய குழு. இருந்தாலும், இடிந்தகரை மக்களை சமாதானப்படுத்தும் வழியைக் காணோம்.
"ரிக்டர் அளவில் 6 வரை தாங்கக் கூடிய சக்தி கொண்டது முல்லைப் பெரியாறு அணை. சந்தேகத்துக்கு இடமில்லாமல், மேலும் மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என, தமிழக அரசு சொல்கிறது; சுப்ரீம் கோர்ட்டும் ஏற்றுள்ளது. ஆனாலும், கேரளா மக்கள் புரிந்து கொள்ளத் தயாராக இல்லை.

கேரளா முதல்வர் மனது வைத்தால், முல்லைப் பெரியாறு பிரச்னை முடிவுக்கு வந்துவிடும். இடைத்தேர்தல் அரசியலை ஓரங்கட்டிவிட்டு, கட்சிக்காரர்களை கொஞ்சம் கட்டுப்படுத்தி வைத்தால், தானாகவே அந்த விவகாரம் அடங்கிவிடும்.
அதேபோல் தான் கூடங்குளம் பிரச்னையும். தமிழக முதல்வர் மனது வைத்தால், ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும். முதலில், "அணுமின் நிலையம் வேண்டும்; விஞ்ஞானிகளின் விளக்கம் திருப்தியளிக்கிறது' என்றவர் தான் ஜெயலலிதா. திடீரென, "இது மத்திய அரசு கவனிக்க வேண்டிய விஷயம்' என்பதாக ஒதுங்கிக் கொண்டார்.

தமிழக அரசு அமைதி காக்கிறது என்ற தைரியத்தில் தான் கூடங்குளம் உண்ணாவிரதம் தொடர்கிறது. அணுமின் நிலையத்துக்குள் யார் இருக்க வேண்டும்; யார் இருக்கக் கூடாது என்பதெல்லாம், போராட்டக்காரர்களால் தீர்மானிக்கப்படுகிறது.இந்த நிலையில், இரு பிரச்னைகளையும் இணைக்கும் ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது என்ற தமிழகத்தின் வாதத்தை கேரளா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்ற மத்திய அரசின் கருத்தை, தமிழக அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாதா?

- ஆர்.ரங்கராஜ் பாண்டே -நன்றி தினமலர் 

Sunday, 18 December 2011

இது தொடரக் கூடாது!-நன்றி தினமணி


பருவமழை நின்றுவிட்டது. முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு வரும் நீர் வரத்தும் குறைந்துவிட்டது. அணையில் இப்போது இருக்கும் நீரின் அளவும் இறங்கிவந்துவிட்டது. ஆனால், இரு மாநிலங்களுக்கு இடையேயான உறவு மேலும் மேலும் விரிசலாகிக் கொண்டே போகிறது.
 கேரளம் முழுவதும், குறிப்பாக ஆலப்புழை, இடுக்கி, பத்தனம் திட்டை, கோட்டயம், ஆலுவாய் மாவட்டங்களில் தொடர்ந்து பேரணிகளும், கூட்டங்களும் நடத்தப்பட்டு, பீதி கிளப்பப்படுகிறது. சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் தடுக்கப்படுகின்றன. வேண்டுமென்றே அவர்கள் முன்னிலையில் தமிழகத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. பதிலுக்குத் தமிழர்களும் இங்குள்ள கேரள மக்களின் வர்த்தக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பிரச்னை தீவிரமாகிக் கொண்டே இருக்கிறது. ஆனால் மத்திய அரசு, இந்தப் பிரச்னையில் தலையிட்டு, ஒரு தீர்வு காண முற்படவில்லை.
 இந்த அணைக்குப் பாதுகாப்பு அளிக்க மத்திய பாதுகாப்புப் படையை நியமிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திமுகவின் தலைவர் கருணாநிதியும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். ஆனாலும் இந்தப் பிரச்னையில் மத்திய அரசு மெளனம் சாதிக்கிறது. மத்திய அரசின் நிர்வாக உத்தரவைப் பெற உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் மனு கொடுக்க வேண்டிய நிலை!
 சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் தொடர்ந்து 10 நாள்களாக நடைபெறாத நிலையில், அந்த சிக்கலைத் தீர்ப்பது குறித்து பிரதமருக்கு அதிக கவலை இருப்பது நியாயம்தான். ஆனால் இரு மாநில உறவுகள் மிக மோசமாகப் போய்க்கொண்டிருப்பது அதைவிட முக்கியமான பிரச்னை அல்லவா? தேசத்தின் ஒற்றுமைக்கே பங்கம் ஏற்படுவதை விடவா, அன்னிய நேரடி முதலீடு முக்கியமாகப் போய்விட்டது?
 இத்தனை நாள்கள் கழித்து மத்திய அரசு கேரள, தமிழக அரசுக்குக் கடிதம் அனுப்புகிறது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பேச்சு நடத்த வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இருமாநில நீர்வளத்துறை செயலர்களுக்கும் கடிதம் அனுப்புகிற அளவுக்கு மிக மெதுவாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னையா இது?
 மேலும் இந்தக் கடிதத்திலேயே சிண்டுமுடிகிற வேலையையும் மத்திய அரசு செய்துள்ளது. டிசம்பர் 15 அல்லது 16-ம் தேதி பேச்சுவார்த்தைக்கான சந்திப்பை நடத்தலாம் என்றால் என்ன அர்த்தம்? மத்திய அரசு ஒரு தேதியை குறித்து, அந்த நாளில் இரு தரப்பும் வாருங்கள் என்று சொல்ல முடியாதா? இரண்டு மாநில முதல்வர்களையும் அழைத்துப் பேசி, முடிவெடுக்கும் அதிகாரம் பிரதமருக்கு இல்லையா? தமது பொறுப்பை ஏன் மத்திய அரசு தட்டிக் கழிக்கிறது?
 நீதிமன்றமும் இந்தப் பிரச்னையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டதாகவே தெரியவில்லை. அணையின் உறுதித்தன்மை குறித்து ஆராய இரு நபர் அடங்கிய வல்லுநர் குழுவை அனுப்ப உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான குழு முடிவு செய்துள்ளது. இக்குழு இந்த மாத இறுதியில் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு நடத்தும், பிப்ரவரியில் இக்குழு தனது அறிக்கையை அளிக்கும் என்றால், அதுவரை இரு மாநில மக்களும் கடையடைப்பு, பஸ் எரிப்பு, தாக்குதல் எல்லாவற்றையும் நடத்திக்கொண்டிருக்க வேண்டுமா? இந்தக் குழு பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து நாளையே வருவது முடியாத செயலா? கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு: ""சாவுக்கு வரச்சொன்னா, பாலுக்கு வந்த கதையாக'' அல்லவா இது இருக்கிறது.
 நிலநடுக்கம் தொடர்பாக இந்திய தர நிர்ணயம் 2002 -இல் வெளியிட்ட தகவல்படி முல்லைப் பெரியாறு அணை, இடுக்கி அணை, சென்னை நகரம் உள்ளிட்டப் பகுதிகள் மண்டலம் - 3இல் உள்ளன. அதாவது 3.5 முதல் 4.2 வரை ரிக்டர் அளவுகோலில் நிலஅதிர்வு - நிலநடுக்கம் பதிவாகும் பகுதிகள் எனக் கூறுகிறது. இந்த நில அதிர்வால் அணைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அப்படியே அணை உடைந்தாலும், அந்த நீர் இடுக்கி அணைக்குத்தான் செல்லும்.
 1976 ஆம் ஆண்டில் முல்லைப் பெரியாறு அணையின் கீழே 50 கி.மீ. தூரத்தில் இடுக்கி அணையை 555 அடி உயரத்தில் கேரள அரசு கட்டியுள்ளது. இது முல்லைப் பெரியாறு அணையைவிட மூன்றரை மடங்கு பெரியது. முல்லைப் பெரியாறு அணையின் கொள்ளளவைவிட 7 மடங்கு அதிகம்.
 ""அணையின் நீர்உயரத்துக்கும் அணைப் பாதுகாப்புக்கும் தொடர்பில்லை; முல்லைப் பெரியாறு அணையின் நீர் முழுவதையும் இடுக்கி அணை ஏற்கும் திறன் கொண்டது'' என்கிற கேரள அரசின் கருத்தை நீதிமன்றத்தில் தெரிவித்ததற்கு, உண்மையைச் சொன்னதற்கு, அந்த அட்டர்னி ஜெனரல் தண்டபாணியை நீக்க வேண்டும் என்கின்றது கேரள எதிர்க்கட்சியான மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி. இதிலிருந்து என்ன தெரிகிறது? அணை உடைந்தாலும் பாதிப்பு இருக்காது என்பதுதானே? பிறகு ஏன் ஆர்ப்பாட்டமும் போராட்டமும்?
 தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் பொருள்கள் தடைபட்டால், அதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். பால் உள்பட அனைத்து உணவுப் பொருள்களும் தமிழகத்திலிருந்துதான் கேரளத்துக்குப் போயாக வேண்டும். நேந்திரம் பழம்கூடத் தமிழகத்திலிருந்துதான் கேரளத்துக்குப் போகிறது என்பதுதானே உண்மை? அப்படி ஒரு மோசமான நிலைமையை ஏற்படுத்த கேரள அரசியல்வாதிகள் முற்படுவார்களேயானால், அதற்குக் காரணம் தமிழக அரசல்ல, மத்திய அரசாகத்தான் இருக்கும்.
 உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல், கேரள சட்டப்பேரவையில் கேரள அரசின் அனுமதி இல்லாமல் கேரளத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டத்தை பிற மாநில அரசுகள் அதிகரிக்கக் கூடாது என்று "கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு' (சட்டத் திருத்த) மசோதா 2006 என்ற பெயரில் தீர்மானம் நிறைவேற்றியபோதே மத்திய அரசு சட்டத்தின் மேலாண்மையை நிலைநாட்டி இருக்க வேண்டும்.
 முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் இடுக்கி அணை இருக்கவே இருக்கிறது சேதமில்லாமல் பாதுகாக்க. ஆனால், தேச ஒற்றுமை சிதைந்தால் அதை ஆணை போட்டுத் தடுக்க முடியாது என்பதை மத்திய அரசு உணர வேண்டும். இந்த நிலைமை தொடரக் கூடாது! 

      நன்றி தினமணி 07 Dec 2011 

Friday, 16 December 2011

தமிழா!!! "இதை நீ படிக்கனும்"... "KOLAVERI song" மாதிரி "PROMOTE" செய்ய வேண்டும்!!! PLEASE!!!

 நன்றி,

முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில்
புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை
பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச
வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர்.

மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில்
கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள் !

“116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும்
எவ்வளவு நாள் தாங்கும் ?

தங்கள் இடத்திலேயே -
தங்கள் செலவிலேயே -
புதிய அணையைக் கட்டி,
தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக
கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக்
கொடுக்கிறோம் என்கிறார்களே.
இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ?
இது என்ன வீண் பிடிவாதம் ?
இது என்ன பைத்தியக்காரத்தனம் ?”

இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது.
கேரளா இதுவரை செய்த அநியாயங்கள்,
புதிய அணை கட்டி இனி செய்ய
உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் -

இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை.
ஏன் தமிழ் நாட்டிலேயே – சென்னையிலேயே கூட,
படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை !

புதிய அணை கட்டுவதில் என்ன தவறு ? -அதான்
அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே
என்று தமிழர்களே கேட்கிறார்கள்.
தமிழ் நாளிதழ்களும், அரசியல் கட்சிகளும்
தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களை
தயார் படுத்துவதில் தவறி விட்டன என்று தான்
சொல்ல வேண்டும்.
இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

புதிய அணை கட்டுவதாகச் சொல்வதில் இருக்கும்
சதி பற்றி விவரமாக அகில இந்திய அளவில்
எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்த வலைத்தளத்தைப் படிப்பவர்களுக்காக -
நான் எனக்குத் தெரிந்ததை சுருக்கமாக
கீழே தருகிறேன்.

முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது
பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் - 1895ல்.
அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர்
சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக
கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின்
வரையரைக்குள் தான் இருந்தது)
எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன்
இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு
பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை
999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு
ரூபாய் 40,000/- குத்தகைப் பணம் ) இந்த
அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல்
கட்டி முடித்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதில்
அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது
தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு
சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான்.
ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம்.
அதிகாரம் செலுத்துவதும் அவர்களே !

இந்த அணையின் உயரம்-கொள்ளளவு -152 அடி.
இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் –
சுமார் 2,08,000 ஏக்கர்.
மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய
4 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள்
பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள் குடிநீருக்கும்
இந்த அணையை நம்பி இருக்கிறார்கள்.
இந்த அணை பறிக்கப்பட்டால் – இத்தனை இடங்களும்
பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும்
பிழைப்பு பறிபோய் – பிச்சைக்காரர்கள் ஆவார்கள்.

பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ? எப்போது ?

கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே,
இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர்
மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான்
ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும்.

பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே
15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியை
தான் பயன்படுத்த முடியும்.
(104 அடி வரை டெட் ஸ்டோரேஜ் .)

ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது.
கொள்ளளவு 70 டிஎம்சி.
பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது
நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள்
பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம்
நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கி
நிரம்பவே இல்லை.

அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் -
பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற
குரல் -கூக்குரல்.
சுண்ணாம்பு அணை உடைந்து விடும்.
அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம்
மக்கள் செத்துப் போவார்கள். எனவே
உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு !

புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ?
மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால்,
நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக
இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும்.

சரி நிரம்பட்டுமே. நல்லது தானே !
அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு
தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே
என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.

அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம்.
பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து
2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து
மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக
தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது.

புதிய அணையை கட்டப்போவது 1853 அடி
உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து
தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது.
நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும்
பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ
மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள -
மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி
வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது.
அணையைக் கட்டிய பிறகு,
இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத்
திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து
ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய
நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.
எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி
இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக
கிடைக்காது.

புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை -
புரிகிறது.

ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை -
எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும்.
35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே -
பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ?

அயோக்கியத்தனம்.
வடிகட்டிய அயோக்கியத்தனம்.

முதலாவதாக -
பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் -
மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து -
நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான்
வந்தடையும்.
பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும்
(10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும்,
நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு
உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய
போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை.
வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி
இருந்தாலும் – வெளியேறும் நீர் பெரியாறு
அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம்
ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து
தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் !
எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்
என்கிற பேச்சே அபத்தமானது.

இரண்டாவதாக -

1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள்.
1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது
என்று குரல் எழுப்பினார்கள்.
பயத்தைக் கிளப்பினார்கள்.
சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள்.
2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை
அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி
அணை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட்டது.

கேரளா சொல்வது போல்
இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல.
ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல்
40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே
செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட்
உள் செலுத்தப்பட்டது.

2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு -
நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி -
லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி,
கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட்
கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக -
ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல்,
கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட்
அணையே உருவாக்கப்பட்டு விட்டது.

கீழே உள்ள வரைபடத்தைப்
பார்த்தால் நன்றாகப் புரியும்.

இதன் பிறகு தான், 27/02/2006 அன்று,
சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை
என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு -
156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம்
என்று அனுமதியே கொடுத்தது.


விட்டார்களா நமது கேரள சகோதரர்கள் ?
மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக,
கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம்
இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி
விட்டார்கள்.

வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான்.

மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம்.
இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின்
பரிசீலனையில் இருக்கும்போதே -
தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக
இருக்குமோ என்கிற தவிப்பில் - மீண்டும் நாடகம்
ஆடுகிறார்கள். அணைக்கு ஆபத்து -புதிய அணை
கட்ட வேண்டும் என்று.

பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள்.
பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள்.
உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
பந்த் நடத்துகிறார்கள்.
இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக்
கேட்கிறது. வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம்
இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

தமிழ் நாடு ஏமாந்தது போதும்.


நன்றி,
Neeya naana Gopinath

Wednesday, 14 December 2011

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஆறுகள், அணைகள்: அப்துல் கலாம் யோசனை-

சென்னை, டிச.14: இந்தியாவில் ஆறுகள், அணைகள் ஆகியவற்றை ராணுவம் அல்லது கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தெரிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் விவசாயம் தொடர்பான மாநாடு சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் அவர் பேசியதாவது:
மாநிலங்களுக்கிடையேயான பிரச்னைக்கு தண்ணீர் காரணமாக இருக்கக் கூடாது. நதி நீர் காரணமாக உள்நாட்டுப் போர் ஏற்பட்டால் அதை நம் நாடு தாங்காது.
நெடுஞ்சாலை, ரயில்வே, மின்சாரம் ஆகியவை தேசிய அளவிலான அமைப்புகள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. அதேபோல், நாட்டின் நீர் ஆதாரத்தையும் நிர்வகிக்க தேசிய அளவிலான அமைப்பை உருவாக்க வேண்டும்.
அமெரிக்காவில் உள்ள மிசிசிபி ஆறு அந்த நாட்டில் உள்ள 32 மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. ஆற்றுநீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே அங்கும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, கடந்த 200 ஆண்டுகளாக மிசிசிபி ஆற்று நீர்ப் பங்கீடு, பராமரிப்பு அந்த நாட்டு ராணுவத்தின் பொறுப்பில் உள்ளது.
இப்போது நம் நாட்டில் நிலவும் பிரச்னைகளைத் தீர்க்க நீர் ஆதாரங்களை தேசியமயமாக்க வேண்டும். ஆறுகள், அணைகளை ராணுவம் அல்லது கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அதன்மூலம் நமது நாடு அமைதியாக வளர்ச்சிப் பாதையில் செல்லும்.
தனிபட்ட, அரசியல் கட்சிகளின் நலன்களை விட தேசிய நலனே முக்கியம் என்ற உணர்வு நம் அனைவரிடமும் வேண்டும்.
உணவு உற்பத்தி இருமடங்காக வேண்டும்: இந்தியாவில் இப்போது 235 மில்லியன் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இப்போதுள்ளதை விட குறைந்த அளவிலான நிலம், தண்ணீர், ஆள்பலம் ஆகியவற்றைக் கொண்டு உணவு உற்பத்தியை 2020-ம் ஆண்டுக்குள் இருமடங்காக அதிகரிக்க வேண்டியுள்ளது.
நாடு முழுவதும் 170 மில்லியன் ஹெக்டேரில் உணவு தானியங்கள் பயிரிடப்படுகின்றன. மக்கள் தொகைப் பெருக்கம், விளை நிலங்களை வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் 2020-க்குள் இந்தப் பரப்பளவு 100 மில்லியன் ஹெக்டேராக சுருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதுள்ள அதே ஆறுகள், நீர்நிலைகள், பிரச்னைகளைக் கொண்டு உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். நமது நாட்டில் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்களில் 60 கோடி பேர் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான்.
புதிதாக பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு மதிப்பு கூட்டு சேவையை வழங்க வேண்டும்.
குறைந்த அளவிலான நீர், ஆள்பலம், நிலம் ஆகியவற்றைக் கொண்டு அதிக உற்பத்தியைச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். நீடித்த வளர்ச்சிக்கு நீராதாரம் மிகவும் முக்கியமாகும்.
மழைக் காலத்தில் வீணாகக் கடலில் கலக்கும் வெள்ள நீரை ஆற்றுநீர் இணைப்பின் மூலம் பாசனத்துக்காகப் பயன்படுத்தலாம். வெள்ள நீரில் 5-ல் ஒரு பங்கு நீரைக் கொண்டு, சிறிய கால்வாய்கள் மூலம் இந்தியா முழுமைக்கும் பாசன வசதியை ஏற்படுத்தலாம் என்றார் கலாம்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக விவசாயத் துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டலத் தலைவர் டி.டி.அசோக், கூட்டமைப்பின் விவசாய அமைப்பின் இணை தலைவர் எஸ்.சந்திரமோகன், மாநாட்டுத் தலைவர் அருண் ஜாவ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நன்றி தினமணி  டிச.14:

இதுகூடவா புரியவில்லை....நன்றி தினமணி

லோக்பால் மசோதா, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு ரூபாய் மதிப்புக் குறைவு போன்ற பிரச்னைகள் வெறும் அரசியல் பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படுகின்றன. ஆனால், இவை ஒவ்வொன்றுமே நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகமாகப் பின்னுக்கு இழுக்கும் தன்மையன என்பதை யாரும் உணர்வதாகத் தெரியவில்லை.
லோக்பால் மசோதா என்பது உயர் இடத்து ஊழலைக் குறி வைத்து எழுப்பப்பட்டாலும் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிவிட்ட ஊழலைக் களைந்தால்தான் மக்களுக்கு அரசின் திட்டங்களுடைய பலன் ஓரளவுக்காவது கிடைக்கும் என்பதால் இதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.
அடுத்ததாக, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு வேண்டும் என்கிற அரசின் பிடிவாதத்தை எடுத்துக் கொள்வோம். இந்தியாவில் பொது விநியோக திட்டத்தை முறையாகவும் வலுவாகவும் கொண்டுவரத் தவறிவிட்டு இதையெல்லாம் வால்மார்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களால்தான் முடியும், அவர்களால்தான் விவசாயிகளுக்கும் அதிக விலை கொடுத்து, நுகர்வோர்களுக்கும் குறைந்த விலையில் பொருள்களை விற்க முடியும் என்பது நம்முடைய கையாலாகத்தனத்தைப் பட்டவர்த்தனமாக ஒப்புக்கொள்வதாகும்.
ஆரம்பத்தில் விவசாயிகளுக்கு அதிக விலை கொடுத்து ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் இந்தப் பன்னாட்டுச் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தின் முதுகெலும்பை முறித்துப் போட்டபிறகு தங்களது சுய ரூபத்தைக் காட்டத் தொடங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
அதைவிட பரிகாசத்துக்கு உரியது, அவர்களால் ஒரு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்பது. 53 நகரங்களில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு ஒரு கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் சக்தியும் திறமையும் அவர்களுக்கு இருந்தால், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வேலையில்லாத் திண்டாட்டமும் தொழில்துறை மந்தமும் ஏன் இன்னமும் நீடிக்க வேண்டும்? அங்கேதான் பல வால்மார்ட்டுகள் இருக்கின்றனவே?
தொழில்துறை உற்பத்தி முதல் முறையாக இந்த ஆண்டு மைனஸ் 5.1% ஆக அக்டோபரில் பதிவாகியிருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் 2011-12-ல் 7% ஆகத்தான் இருக்கும். 2013-14-ல் தான் 8% என்ற அளவை எட்டும் என்று "ஃபிட்ச்' என்ற தர நிறுவனம் கணித்திருக்கிறது.
இது ரிசர்வ் வங்கியும் மத்திய திட்டக் கமிஷனும் மத்திய நிதித்துறையும் கணித்ததைவிட மிகவும் குறைவு என்பது மட்டுமல்ல, உண்மையும்கூட.
சர்வதேச அளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை மட்டும் அல்லாமல் கடன்கள் மீது வங்கிகள் வசூலிக்கும் வட்டியை மார்ச் 2010 முதல் ரிசர்வ் வங்கி ஒவ்வொரு காலாண்டிலும் இடைவிடாமல் உயர்த்திக் கொண்டே வருவதும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
கடைசியாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டே வருகிறது. திங்கள்கிழமை ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு ரூ.52.84 ஆக இருந்தது செவ்வாய்க்கிழமை ரூ.53.23 ஆக மேலும் சரிந்துவிட்டது. இது 2012 பிப்ரவரி வரை நிச்சயம் தொடரும் என்றே பேசிக்ஸ் பாரெக்ஸ் என்ற அமைப்பின் இயக்குநர் கே.என். தே தெரிவிக்கிறார்.
டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்புக் குறைந்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்கியிருந்த கடன் பத்திரங்களின் காலம் முடிவடைந்து வருவதால் அவற்றுக்கு டாலர்களாகத் திருப்பித் தர வேண்டியிருக்கிறது. அடுத்ததாக, வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் முதலீடு செய்த தொகையைத் திரும்பப் பெற்று தாய் நாடுகளுக்கு அதிக அளவில் அனுப்பி வருகின்றன.
குளிர்காலம் நெருங்குவதால் சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெயை இந்தியா அதிகம் வாங்க நேர்கிறது. இதற்காக அதிகம் அன்னியச் செலாவணி தேவைப்படுகிறது. இந்தக் காரணங்களால் டாலருக்குத் தேவை மிகுந்து இந்திய ரூபாயின் மதிப்பு குறைகிறது என்று தெரிகிறது.
எல்லாவற்றையும்விட இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பண்டங்களின் மதிப்பைவிட இறக்குமதி செய்யும் பண்டங்களின் மதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்த வகையில் வெளிவர்த்தகப் பற்றாக்குறை கடந்த நவம்பரில் 19.5 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டிவிட்டது. இவையெல்லாம் நம்முடைய பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டும் அறிகுறிகள்.
இன்னமும் இவற்றையெல்லாம் பூசி மெழுகாமல் உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். சமதர்மக் கொள்கைகள் வெறும் சித்தாந்த கோஷங்கள் அல்ல; இந்தியா போன்ற 30% அதிகமான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏழை நாடுகளில் கிடைப்பவற்றை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து வறுமையிலிருந்து மீள சுயச்சார்பைப் பெறுவதே சரியான வழிமுறையாக இருக்கும்.
இதையெல்லாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கவனிக்கிறதா, கவலை கொள்கிறதா என்று தெரியவில்லை. பெட்ரோலியப் பொருள்களின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அரசுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களிடம் வழங்கியதைப்போல, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கவலைப்படும் பொறுப்பையும் யாரிடமாவது ஒப்படைத்துவிட்டதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதைப்போல, நாட்டுக்கு நாடு அதனதன் பிரச்னைகள் இருக்கின்றன. ஒரு நாட்டுக்குப் பொருத்தமான தீர்வு இன்னொரு நாட்டுக்கும் பொருந்தும் என்று எதிர்பார்ப்பது தவறு. நமது பிரச்னையைத் தீர்க்க, டோக்கியோவையும், வாஷிங்டனையும், மாஸ்கோவையும், லண்டனையும் எதிர்பார்க்காமல் கட்சி மனமாச்சரியங்களை மறந்து கைகோக்க வேண்டிய நேரம் இது. இதுகூட ஏன் நமது தலைவர்களுக்குப் புரியவில்லை?    நன்றி தினமணி 

Tuesday, 13 December 2011

ஏமாறச் சொல்வது யாரோ?-நன்றி தினமணி 13 Dec 2011


புவிவெப்ப மாறுதலை நிகழ்த்த டர்பனில் நடந்து முடிந்த கூட்டத்தில், எதிர்காலத்தில் இந்த இலக்கை அடைவதற்கான ஒப்பந்தங்கள் குறித்த பயணத் திட்டம் (ரோட் மேப்) பெரும் விவாதத்துக்கு உள்ளாகியதால், இந்தக் கூட்டத்தில் சொல்லிக்கொள்ளும்படியான எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.
 1997-ம் ஆண்டு கியோட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து ஆர்ப்பாட்டம் செய்தது அமெரிக்கா. இந்த முறை, வளர்ந்துவரும் நாடுகள் சார்பாக பெரும் எதிர்ப்பைத் தெரிவித்திருப்பது இந்தியா.
 இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன், இந்தியாவின் 120 கோடி மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், வெறும் வெற்றுக் காசோலையில் கையெழுத்திட முடியாது. பயணத் திட்டம் என்ன என்பது தெரியாமலேயே ஏற்க முடியாது என்று உறுதியாக மறுத்துவிட்டார். இதற்காக அரங்கில் இருந்த அனைவரும் அவரைப் பாராட்டியிருக்கிறார்கள்.
 இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகள்தான் முக்கியமாக இந்த டர்பன் மாநாட்டில் எதிர்ப்புத் தெரிவித்த வளரும் நாடுகள். ஐரோப்பிய ஒன்றியம் இந்த மாநாட்டின் ஒப்பந்த ஷரத்துகளில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், அவை வளரும் நாடுகளின் பொருளாதார மேம்பாட்டுக்குக் குந்தகமாக அமையும் என்பதுதான் இவர்கள் சொல்லும் வாதம்.
 இந்த மூன்று நாடுகளும்தான் தற்போது அதிக அளவு கரியமில வாயுவையும் மற்றும் வளிமண்டலத்தை மாசுபடுத்தும் வாயுக்களையும் வெளியேற்றி வருகின்றன என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் குற்றச்சாட்டு.
 கியோட்டோ மாநாட்டுக்குப் பிறகு வளர்ந்த நாடுகள் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் தங்களது மாசுபடுத்தும் அளவைக் குறைத்துக்கொண்டுள்ளன. ஆனாலும், வளரும் நாடுகள், குறிப்பாக இந்தியா, இதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மேலும் மேலும் வளிமண்டல மாசுபடும் தொழில்நுட்பத்துக்கே இலக்காகி வருகின்றது. இருக்கின்ற தொழில்நுட்பத்தை மேம்படுத்தி மாசு குறைந்ததாகச் செய்யவும் முழு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் அவர்களது குற்றச்சாட்டு.
 இந்த நிலையில், வளிமண்டலத்தை மாசுபடுத்தும் நாடுகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாய நடவடிக்கைகள் குறித்த அம்சத்துக்குத்தான் இந்தியாவும் சீனாவும் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. எங்களைக் கட்டாயப்படுத்தாதீர்கள். உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா என்பதுதான் இவர்கள் கேட்கும் கேள்வி.
 டர்பன் மாநாட்டில் தற்போது வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள், சிறிய நாடுகள் என்ற பேதமே இல்லாமல், நாம் அனைவரும் ஒன்று என்று கருத்தாக்கம் உருவாகியுள்ளது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், அந்த ஒப்பந்தம் அனைவருக்கும் ஒன்றாகவும், அனைவரையும் கட்டுப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என்பதைத்தான் தற்போது இந்தியா, சீனா வலியுறுத்துகின்றன.
 வெப்பமண்டலக் காடுகளைக் காக்கவும், மாசு இல்லாத் தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கும் ஏற்படும் செலவுகளை ஈடுசெய்வதற்காக ஒரு நிதியை ஏற்படுத்த வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. இந்த நிதியின் அளவு ஒவ்வொரு நாட்டுக்கும் எவ்வாறு பிரித்து அளிக்கப்படும் அல்லது வளர்ந்து வரும் நாடுகளுக்கும், சிறிய நாடுகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு என்ன வரைமுறை என்பதெல்லாம் இனிதான் விவாதிப்பார்கள்.
 புவிவெப்பம் 2 டிகிரி உயர்ந்துவிடாதபடி குறைக்க வேண்டும் என்பதற்காகத்தான் மீண்டும் மீண்டும் வளிமண்டல மாசினைக் குறைக்க அனைத்து நாடுகளுக்கும் கடமை இருக்கிறது என்று வலியுறுத்தப்படுகிறது.
 120 கோடி மக்களின் வாழ்க்கையோடு விளையாட முடியாது என்று இந்தியா சொல்லும்போது பெருமையாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்திய அரசின் எந்தவொரு கொள்கையும் உலகமயமாதலைச் சார்ந்துள்ளது. பல்வேறு நிறுவனங்களை 100 விழுக்காடு அன்னிய நேரடி முதலீட்டில் அனுமதிப்பதாக உள்ளது. அப்படியானால், பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து தொழில்வளர்ச்சி என்ற போர்வையில் இந்தியாவை மாசுபடுத்தி அல்லது பன்னாட்டு நிறுவனங்களுக்கு அயல்ஒப்பந்த அடிப்படையில் பணிகள் ஏற்று, மாசுகளை மட்டும் இங்கே ஏற்றுக்கொண்டு, அதன் மூலம் உலக வளிமண்டலத்தையும் மாசுபடுத்த அனுமதித்து வருவதன் மூலம் இந்த 120 கோடி மக்களில் உள்ள அதிக ஏழைகளின் நலனை எப்படிக் காப்பாற்றப் போகிறோம்?
 ஏழைகளும் விவசாயிகளுமா இந்திய நதிகளையும் நீர் நிலைகளையும் தொழில் வளர்ச்சியால் மாசுபடுத்தச் சொன்னார்கள்? இவர்களா நவீன உலகத்தின் சுகங்களையெல்லாம் எங்களுக்குக் காட்டுங்கள் என்று கேட்டார்கள்? ஏழையின் பெயரைச் சொல்லி தொழில் வளர்ச்சியை, வளிமாசினை நியாயப்படுத்துகிறார்கள். ஆனால், தொழில் வளர்ச்சியின் பயன் ஏழைக்கு மட்டும் கிடைப்பதே இல்லை என்பதுதானே நிஜம்?
 சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு தேவைக்கு அதிகமாக மோட்டார் வாகனத் தயாரிப்பை ஒருபுறம் ஊக்குவித்துக்கொண்டு மாசுக்கட்டுப்பாடு பற்றி நாம் கவலைப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. பொதுப் போக்குவரத்தைத் திறம்பட நிர்வகிக்கத் தயாராக இல்லாமல், தனிநபர் கடன் வசதிகளைப் பெருக்கி அவர்களது பொருளாதாரத்தைச் சீர்குலைத்து மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்களுக்கு உதவும் அரசு, மாசுக் கட்டுப்பாட்டை சர்வதேச அரங்கில் நியாயப்படுத்துவதை எப்படி அங்கீகரிப்பது?
 ஒருபுறம் அதிக அளவு கரியமில வாயுவையும் மற்றும் வளிமண்டலத்தை மாசுபடுத்தும் வாயுக்களையும் வெளியேற்றும் தொழிற்சாலைகளைத் தங்களது நாட்டில் நிறுவாமல் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நிறுவி தங்களை யோக்கியர்கள் ஆக்கிக்கொண்டு, இன்னொருபுறம் கியோட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுங்கள் என்று நம்மை வற்புறுத்தும் நயவஞ்சகத்தை துணிந்து தோலுரித்துக்காட்ட நாம் ஏன் தயங்குகிறோம்?
 நமக்கும்தான் சரி, "மீசைக்கும் ஆசை; கூழுக்கும் ஆசை' என்றால் எப்படி?
நன்றி தினமணி 13 Dec 2011

பாத்திரத்தை பொறுத்தது உணவின் சுவையும், தரமும்!


இன்று பெரும்பாலானோர், சில்வர் பாத்திரத்தில் தான் சமைக்கின்றனர். இதில் சமைப்பதால் நன்மை, தீமை ஏதுமில்லை.

வெண்கலப் பாத்திரத்தில் சமைத்த உணவால், உடல் சோர்வு நீங்கும். இதில் சமைத்த உணவுப் பொருட்களுக்கு, "புட் பாய்சன்' ஆகும் வாய்ப்பு குறைவு என்பதால், இன்றும் கோவில்களில் சமைப்பதற்கு வெண்கலப் பாத்திரத்தை பயன்படுத்துகின்றனர்.

செம்புப் பாத்திரங்களில் சமைக்கும் உணவுகளை தொடர்ந்து உண்டால், ரத்தம் சுத்தமாகும். கண் பார்வைக்கு நல்லது. வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும். "பெப்டிக் அல்சர்' இருப்போர் செம்புப் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் நோய் நீங்கும். துளசி போன்ற மூலிகை இலையை நீரில் போட்டு, அதை இரவு முழுவதும் செம்புப் பாத்திரத்தில் வைத்து, காலையில் அருந்தினால் வெண் குஷ்டம் நீங்கும். இந்த தீர்த்தம், இருமல், சளி உள்ளிட்ட வைரல் தொற்றுகளையும் தடுக்கிறது. பெருமாள் கோவில்களில் துளசி தீர்த்தம் கொடுப்பதற்கு இதுவே காரணம்.

இரும்பால் ஆன பாத்திரங்களை, வறுப்பதற்கு பயன்படுத்தலாம். ஆனால், துவர்ப்பு சுவையுடைய பொருட்களை இரும்பு வாணலியில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால், உணவுப்பொருள் கறுப்பு நிறத்திற்கு மாறி, சுவையிலும் மாற்றத்தைக் கொடுக்கும்.

அலுமினியம், ஈயப் பாத்திரங்களை பயன்படுத்துவது உகந்ததல்ல. பல பாத்திரங்கள் இருந்தாலும், மண்பாண்டங்கள் தான் சமைக்க மிகச் சிறந்தவை. எவ்வித பின்விளைவுகளும் அற்றது. மண்பானையில் சமைத்த உணவு பல மணி நேரம் கெடாமல் இருக்கும்.நமக்கு இயற்கை, "ரெப்ரிஜிரேட்டரே' மண்பாண்டங்கள் தான்! 


தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின், உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரமூர்த்தி -நன்றி தினமலர்;8-10-2011

Tuesday, 6 December 2011

குலு(க்)ங்கிய விமானம்


விமானப்பயணம் புதிதாக போகிறவர்களுக்கு ஆச்சர்யப்பயணம் அடிக்கடி போகிறவர்களுக்கு சலிப்பான பயணம் ஆனால் இந்த இருவருக்கும் ஏற்படும் திகிலான பயணமும் இருக்கிறது icon smile குலு(க்)ங்கிய விமானம் அதைப் பற்றித்தான் கூறப்போகிறேன்.
Large Clear Turbulence குலு(க்)ங்கிய விமானம்விமானப்பயணத்தின் போது வானிலை காரணமாக சில நேரங்களில் மேக மோதல், அழுத்தம் (Turbulence) காரணமாக சில குலுக்கல்கள் அதிர்வுகள் இருக்கும். இதை சந்திக்காத விமானப்பயணம் யாருக்கும் இருக்க முடியாது. முதல் முறை போகும் போது இதைப்போல கொஞ்சம் ஆனதுக்கே இது பற்றி அதிகம் தெரியாமல் இருந்ததால் பயத்தில் நாக்கெல்லாம் உலர்ந்து விட்டது. பின் இதை நண்பர்களிடம் கூறிய பிறகு அட இதா! இதெல்லாம் சகஜமப்பா என்று கூறி என்னை அமைதியாக்கி விட்டார்கள் பின்னர் எனக்கும் இது பழகி விட்டது.
இந்த முறை ஊருக்கு வந்துவிட்டு திரும்ப சிங்கப்பூர் (இரவு) செல்லும் போது மீண்டும் ஒரு முறை எனக்கு உயிர் பயத்தைக் காட்டி விட்டது. சென்னையில் தற்போது மழை பெய்து கொண்டு இருப்பதால் சீதோஷ்ண நிலை காரணமாக ஆடிய ஆட்டத்தில் அடி வயிறு எல்லாம் கலங்கி விட்டது. நான் அடுத்த நாள் அலுவலகம் செல்ல வேண்டும் என்பதால் விமானம் கிளம்பும் முன்பே தூங்கி விட்டேன். விமானம் கிளம்பும் போது அதிர்வில் லேசாக விழித்து பின் அரைத்தூக்கத்தில் இருந்தேன்.
ஐந்து நிமிடம் தான் இருக்கும் விமானம் கிளம்பி தடக்னு கீழே இறங்கியது. உதாரணத்துக்கு சீரான சாலையில் சென்று கொண்டு இருக்கும் போது நாம் செல்லும் பேருந்து பள்ளத்தில் திடீரென்று இறங்கினால் உங்களுக்கு எப்படி இருக்கும் அது மாதிரி. இது தரையில ஆனா பரவாயில்லைங்க வானத்துல ஆனா! எனக்கு தூக்கி வாரிப்போட்டு விட்டது. இது வரை என் பயணங்களில் இந்த அளவிற்கு இறக்க அதிர்வை நான் கண்டதில்லை. சரி ஆகிவிடும் என்று இருந்தால் ஒரு பத்து நொடிக்கு நம்ம சென்னை சாலையில் போகிற மாதிரி கடக் புடக்குனு மேலே கீழே இறங்கி ஆடிய ஆட்டத்தில் என் மனைவி பயத்தில் வீல் என்று கத்தி விட்டார். இந்த சமயங்களில் பத்து நொடி என்பது பத்து நிமிடம் போல நமக்குத் தெரியும்.
நான் என்ன பண்ணினேன் என்று கேட்கறீங்களா! குருதிப்புனல் படத்துல கமல் என்ன சொல்லி இருக்காரு வீரம்னா பயமில்லாத மாதிரி காட்டிக்கிறதுனு அதை அப்படியே பின்பற்றி நான் பயக்காத மாதிரி உட்கார்ந்து இருந்தேன் icon biggrin குலு(க்)ங்கிய விமானம் இது வரைக்கும் நல்லாத்தான் போச்சு!! இதன் பிறகு நடந்து வந்து கொண்டு இருந்த பணிப்பெண் விமானம் ஆடிய ஆட்டத்தில் நடக்க கூடாது என்ற விதிமுறைக்கு ஏற்ப அப்படியே என் அருகில் தரையில் உட்கார்ந்து கொண்டார். இது கூட எனக்கு பயமில்ல ஆனால் உட்கார்ந்ததோட இல்லாமல் கடவுளை வேண்டுச்சு பாருங்க அங்க தான் பீதியாகிட்டேன்.
பொதுவா பணிப்பெண்களுக்கு இது போல சம்பவங்கள் ரொம்ப சகஜம் இதை விட ஆட்டத்தை எல்லாம் பார்த்து இருப்பாங்க அதனால் அவங்க பயப்பட மாட்டாங்க ஆனா அந்தப்பெண்ணே பயப்பட்டு கடவுளை வேண்டியதும் எனக்கு கலவரமாகி விட்டது. ஆஹா! நம்மை நேரா மேலேயே கூட்டிட்டு போய்டுவாங்க போல இருக்குன்னு. இதன் பிறகும் ஆட்டம் நிற்கவில்லை. சும்மா கட்ட வண்டில போகிற மாதிரி டக்குனு கீழே இறங்குது வலது பக்கம் போகுது இடது பக்கம் போகுது நமக்கு சங்கு தான் போல இருக்குனு செம பயமாகி விட்டது.
நாங்க மூன்று பேர் இருக்கையில் அமர்ந்து இருந்தோம் ஜன்னல் பக்கம் என் மனைவி, நான் நடைபாதை பக்கம், என் மகன் என் மனைவியின் மடியில் தலை வைத்து என் மீது கால் வைத்து நடுவில் படுத்து இருந்தான். விமானத்தில் இருக்கிறவங்க எல்லாம் பயத்துல இருக்காங்க என் பின்னாடி இருந்த ஒரு பொண்ணு (ஆண்ட்டி!) அவர் அருகில் இருந்தவரை கட்டிபிடித்துட்டு கீச் கீச் னு கத்திட்டு இருக்கு. முன்னாடி இருக்கிறவங்க எல்லாம் பேய் அடிச்ச மாதிரி திருதிருன்னு பார்த்துட்டு இருக்காங்க. இவன் அப்பா இந்த ப்ளைட் சரி இல்ல ரொம்ப ஆடுது நாம் அன்னைக்கு வந்த ப்ளைட் தான் நல்லா இருந்ததுன்னு சொல்லிட்டு இருக்கான். அடேய்! இரண்டுமே ஒரே ப்ளைட் தாண்டா! இங்க ரணகளமே நடந்துட்டு இருக்கு இவன் என்னடான்னா இப்படி சொல்றான் என்ன நடக்குது என்று தெரியாமல். சரி! இளங்கன்று பயமறியாது.
இது ஒரு காமெடின்னா இன்னொன்று அதை விட மெகா காமெடி ஒன்று நடந்தது.. நம்ம ஆளுங்களுக்கு விமான நிலையத்தில் இருக்கும் வரை எதுவும் வராது ஆனால் விமானம் ஏறியதும் தான் எல்லாம் வரும். வழக்கம் போல ஒருத்தரு விமானம் கிளம்பி கொஞ்ச நேரத்துலையே டாய்லெட்க்குள்ள போயிட்டாரு இவர் உள்ளே போய் ஒரு இரண்டு நிமிசத்தில் இந்த ஆட்டம். சும்மாவே ஆட்டம் பயங்கரமா இருக்கு இவர் இருந்த டாய்லெட் விமான டாய்லெட் என்பதால் இரண்டடிக்கு இரண்டி தான் இருக்கும் சும்மா குலுக்கு குலுக்குனு குலுக்கி இருக்கும் கதவுல எல்லாம் மோதி இருப்பாரு icon smile குலு(க்)ங்கிய விமானம் என்னடா ஒண்ணும் சத்தத்தையே காணோமே என்று இருந்தால் கொஞ்சம் ஆட்டம் குறைந்த பிறகு தடதட னு அலறி அடித்துட்டு வெளியே ஓடி வராரு. ஹா ஹா எனக்கு அந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு.
கண்டிப்பா விமானம் கவிழ்ந்து விட்டது என்றே உள்ளே நினைத்து இருப்பார் சிறிய இடம் என்பதால் உள்ளே அங்கே இங்கே மோதி இருப்பார். நான் பயத்தோடு உட்கார்ந்து இருந்தேன் பின் கொஞ்ச நேரத்தில் சரி ஆகி விட்டது அதன் பிறகு தான் மேட்டரு நம்ம ஆளு மறுபடியும் உள்ளே போயிட்டாரு. ஹா ஹா ஹா பாதியிலேயே வந்துட்டாரு போல பயத்துல. எனக்கு இப்ப நினைத்தாலும் சிரிப்பா இருக்கு.
அப்புறம் கண்ணை மூடி தூங்கிட்டேன் . நடுவுல நம்ம பணி ஆண்!! Excuse Me Sir! Do you want veg or non Veg னு கேட்டார்.. யோவ்! ஏற்கனவே கலக்கி இருக்கு இதுல இது வேறயா ஆளை விடுன்னு No Thanks சொல்லிட்டேன். Are you sure Sir னு விடாம கேட்கிறார்.. ஆமாய வேண்டவே வேண்டாம் னு கண்ணை மூடியவன் அதன் பிறகு சிங்கப்பூர் வந்த பிறகு தான் கண்ணைத் திறந்தேன். வீட்டுக்கு வந்த பிறகு மனைவியிடம் அதன் பிறகு விமானம் ஆடுச்சா ன்னு கேட்டேன்.. ஆமாநீங்க என்ன கண்ணை மூடித் தூங்கிட்டீங்க! அதன் பிறகும் ஆடிட்டே இருந்தது பயத்துல நான் தூங்கவே இல்லை என்று கூறினார் icon smile குலு(க்)ங்கிய விமானம்
நன்றி http://www.giriblog.com

Monday, 5 December 2011

எங்கள் மேனேஜர்




Good project management is not so much knowing what to do and when, as knowing what excuses to give and when. 
ஒரு மீட்டிங்-கின் போது எங்கள் மேனேஜர் 'I have been managing this project for...' என்று சொல்வதற்குப் பதிலாக 'I have been damaging this project' என்று சொல்லி விட்டார்.உண்மையை சொல்ல வேண்டும் என்று சொன்னாரா இல்லை நாக்கு குழறி விட்டதா தெரியவில்லை.மேனேஜர் -களுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே உள்ள உறவு மாமியார்-மருமகள் உறவு போல எப்போதும் உராய்வுகள் நிறைந்ததாகவே இருக்கிறது. அவன் தான் சரியில்லை என்று இவனும் இவன் தான் சரியில்லை என்று அவனும் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொள்வது!

உலகில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஒன்று: இன்னொருவரைப் பற்றிக் கவலைப்படாமல் மாங்கு மாங்கு என்று தன் வேலையை (மட்டும்)பார்க்க வேண்டும் என்ற மனோபாவம் கொண்டவர்கள். இன்னொன்று, தான் வேலை செய்யாமல் பிறரை நிர்வாகம் மட்டும் செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள். இந்த இரண்டு வேலைகளில் எது சுலபம் எது கடினம் என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்லுவார்கள். மேனேஜரைக் கேட்டால் பத்து பேரை கட்டி மேய்க்கும் வேலை தான் சவாலானது என்று சொல்வார். தொழிலாளியைக் கேட்டால்
'அவரை ஒருநாள் நாங்கள் செய்யும் வேலையை செய்து பார்க்கச் சொல்லுங்கஅப்ப தான் எங்க கஷ்டம்புரியும்என்று சொல்வார்கள்.
மேனேஜரைப் பற்றி கேலியாக இப்படி சொல்வார்கள் 'ஒரு பெண் ஒன்பது மாதத்தில் ஒரு குழந்தையைப் பெற்றால் ஒன்பது பெண்கள் சேர்ந்து ஒரு மாதத்தில் ஒரு குழந்தையைப் பெற முடியும் என்று நினைப்பவர்' ...மேலும், you can relax and take your own time..but make sure that the work is completed before this Friday!?! போன்ற அருமையான அர்த்தம் பொதிந்த வாசகங்களை உதிர்ப்பது மேனேஜர்களுக்கு மட்டுமே கைவந்த கலை.

ஆனால் நிர்வாகம் செய்வது என்பது ஆடுகளை மேய்ப்பது போல சுலபமான வேலை அல்ல. ஏனென்றால் ஆடுகள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கும். ஒன்றுக்குப் பின் ஒன்று வசியம் செய்து விட்டது போல சமர்த்தாக நடக்கும்.ஆனால் மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள்.ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம், ஒவ்வொருவருக்கும் ஒரு குணம்!மேலும் இப்போதெல்லாம் தினம் பதினாறு மணிநேரம் வேலை வாங்கும் அடிமைமுறை நடைமுறையில் இல்லை. கொஞ்சம் ஏதாவது மாறுதலாக சொல்லிவிட்டாலே மோப்பக் குழையும் அனிச்சம் போல H .R இடம் போட்டுக் கொடுத்து விடுவார்களோ SKIP LEVEL MEETING வைத்து விடுவார்களோ என்று மேனேஜர்களும் இன்று பயப்பட வேண்டி இருக்கிறது.மேனேஜருக்கு கஸ்டமரிடம் பதில் சொல்ல வேண்டும்;திடீரென்று வந்து நாலுநாள் லீவ் கேட்கும் ஆளை Handle செய்ய வேண்டும். அடுத்த ரிலீசுக்கு Resource Management செய்யவேண்டும்;எதிர்பார்க்காமல் வந்து ரிசைன் செய்யும் ஆளுக்கு back -up பிளான் இருக்க வேண்டும்.இப்படி எத்தனையோ!

தனியார்மயம் தரும் சீதனம்! நன்றி தினமணி


எதிரிகளை மட்டுமன்றி, நாட்டில் நிலவும் உட்பகை குறித்தும் உளவு பார்ப்பது ஏற்கக்கூடியதாகவே இருந்து வருகிறது. ஆனால், ஒவ்வொரு மனிதனையும் ஒற்றுப்பார்த்து, அவர்தம் அந்தரங்க விவகாரங்களையும் தெரிந்துகொள்வது சரியா?, இது ஒரு அரசின், குறிப்பாக மக்களாட்சியின் இறையாண்மைக்குப் பொருந்துமா? என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்வியை எழுப்பியிருப்பவர் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே.
லண்டனில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், அங்கு வந்திருந்த மக்களிடம், "நீங்கள் பயன்படுத்தும் செல்போனும் உளவு பார்க்க உதவி செய்கிறது. மக்கள் அனைவரையும் அரசாங்கம் உளவு பார்க்கிறது' என்று கூறியிருக்கிறார். இத்தகைய உளவு பார்க்க உதவும் தகவல் தொழில்நுட்பக் கருவிகளை மேலை நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் மிக அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருக்கின்றன.
லிபியாவின் முன்னாள் அதிபர் கடாஃபி உள்நாட்டு மக்களில் சிலரும் இங்கிலாந்து சென்று வாழும் லிபிய மக்களும் தனக்கு எதிராக இருப்பதை உளவுத் தகவல் தொழில்நுட்பத்தினால் அறிந்து, அவர்களைத் தீர்த்துக்கட்டியிருக்கிறார். மேலைநாட்டுத் தகவல் தொழில்நுட்பக் கருவித் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது உளவுக் கருவிகளை லிபியா, சிரியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கு விற்றுள்ளன.
இந்திய அரசின் சிபிஐ அனுப்பும் மின்கடிதங்கள் அனைத்தையும் சீனா படித்துக் கொண்டிருக்கிறது என்று அசாஞ்ச் சொல்லும்போதும்கூட, ஒரு நாடு ஒரு அண்டை நாட்டின் மீது இப்படித்தான் தன் கவனத்தைச் செலுத்தும் என்கின்ற வகையில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், மக்களாட்சி நடைபெறும் நாட்டில்கூட, அனைத்து மக்களையும் உளவு பார்க்க முடியும், செல்போனும் இணையதளமும் அதை சாத்தியம் ஆக்குகிறது என்பதை அறியும்போது, கொஞ்சம் ஆச்சரியத்தையும் - கூடுதலாக அச்சத்தையும் உண்டாக்குகின்றது.
தீவிரவாதத்தைக் கண்காணித்தல், நாட்டின் பாதுகாப்பு என்ற போர்வையில் ஒவ்வொரு நாடும் எப்படி உளவு பார்க்கின்றன, இவை பொருளாதார வர்த்தகப் பயன்பாட்டுக்கு எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பது வளர்ச்சியால் ஏற்படும் தீமைகள் என்று ஒதுக்கிவிடக்கூடியவை அல்ல. இத்தகைய உளவு பார்க்கும் தகவல்தொழில்நுட்ப வசதியால் தனிமனித அந்தரங்கம் என்பதே இல்லாமல் ஆகிவிட்டது.
இந்த உளவுத் தொழில்நுட்பம் வெறுமனே அரசுகளுக்கு மட்டுமே விற்கப்படுவதில்லை. இவை பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கும் கிடைப்பதில் தடையில்லாமல் கிடைக்கின்றன. தங்களுக்கு இணையாகப் போட்டியில் உள்ள அல்லது வளர்ந்துவரும் மற்றொரு தொழில் நிறுவனத்தைக் கண்காணிக்க இதனைப் பயன்படுத்த முடியும். ஓர் அரசியல் கட்சி இன்னொரு அரசியல் கட்சியை வேவு பார்க்கப் பயன்படுத்தலாம். கணினி மூலம் நடைபெறும் அனைத்து வர்த்தகப் பரிமாற்றங்கள், வணிகச் செயல்பாடுகளிலும் இத்தகைய உளவுத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம். ஆக, ஒன்று மட்டும் உறுதியாக்கப்பட்டுள்ளது. மின்அஞ்சல், செல்போன் இரண்டையும் எவராலும் உட்புகுந்து கண்காணிக்க முடியும்.
செல்போனும் இணையதளமும் பாதுகாப்பான நடைமுறைகள் அல்ல என்பதைத்தான் இந்தத் தொழில்நுட்பம் நமக்குப் புரிய வைத்துள்ளது. ஆனால், இவை இல்லாமல் இனி எந்தவொரு தனிமனிதனாலும் செயல்படவே முடியாது என்கிற அளவுக்கு தகவல் தொழில்நுட்பத்தின் பொன்விலங்கை வேண்டுமென்றே மனித இனம் பூட்டிக்கொண்டாகிவிட்டது. சாதாரண வங்கிக் கணக்கை செயலாக்கவும், ரயில் பயணத்தை முன்பதிவு செய்யவும்கூட நமக்கு இணையதளம் அவசியமாகிவிட்டது. இனி பின்னோக்கிச் செல்லுதல் இயலாது.
இணைய தளத்தில் உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர் அனுப்பும் மின்அஞ்சலை ஆர்வத்தால் திறந்தாலே போதும், அதில் நமது தகவல்கள் அனைத்தையும் உறிஞ்சிக்கொள்ளும் சைத்தான் மென்பொருள்கள் உள்ளன என்று சொன்னாலும் அதை உள்வாங்கிக்கொள்ள ஆளில்லை. ஃபேஸ்புக் பகுதியில் யார் வேண்டுமானாலும் நுழைய முடியும் என்றாலும், அனைத்துத் தகவல்களையும் அதில் கொட்டிவிடாத ஆட்கள் மிகக் குறைவு. இந்தத் தொழில்நுட்பம் இல்லாமல் இருக்க முடியாது, வாழவே முடியாது என்கின்ற நிலைமை உருவாக்கப்பட்டுவிட்டது.
இருப்பினும், இத்தகைய கண்காணிப்பு மற்றும் உளவுத் தொழில்நுட்பத்தை யார் விற்கலாம், யார்யாரெல்லாம் வாங்கிப் பயன்படுத்தலாம், பயன்படுத்தப்படுவதில் உள்ள அளவுகள், எல்லைகள் என்ன என்பனவற்றை வரையறை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் இதற்கு மேலதிகமான தேவை இருக்கிறது. ஏனென்றால், இங்கே தகவல்தொழில்நுட்பத்தில் அதிகளவில் வெளிநாட்டு நிறுவனங்கள்தான் முதலீடு செய்துள்ளன. இந்நிறுவனங்கள் தாங்கள் சேகரிக்கும் உளவுத் தகவல்களை இந்திய அரசுக்கு வழங்கினால் பரவாயில்லை. வேறு நாடுகளுக்கோ அல்லது தீவிரவாத அமைப்புக்கோ கிடைக்கச் செய்தால் எத்தனை மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தீவிரவாதம் தலைவிரித்து ஆடும் இன்றைய சூழ்நிலையில் இத்தகைய தொழில்நுட்பத்தை தீவிரவாதிகள் வாங்கி, அரசையும் மக்களையும் கண்காணிப்பதும் உளவு பார்ப்பதற்குமான சாத்தியங்கள் இருப்பதை மறுக்க முடியாது.
தகவல் தொழில்நுட்பத் துறை தனியார்மயமாக்கப்பட்டதன் விளைவு 2ஜி போன்ற மெகா ஊழல் மட்டுமல்ல, தேசப்பாதுகாப்புக்கும் தனிமனித சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தலும் கூட என்பதை இப்போதாவது நாம் புரிந்து கொண்டால் சரி!
நன்றி தினமணி