Tuesday, 21 April 2015

கண்கள்

கோணலாக நின்று, கொஞ்சம் கோக்குமாக்காகப் புன்னகை புரிந்து, க்ளிக் செய்தால், செல்ஃபிக்களைக் குவிக்கும் 12 மெகாபிக்ஸல் செல்போன் கேமராவைவிட நம் கண்கள் அதிவிசாலமானது. ‘மனித கண்கள், 576 மெகாபிக்ஸல் திறன் கொண்டவை’ என்கிறது ஒரு கணக்கு. அதனால்தானோ என்னவோ மனதுக்குப் பிடித்தவரைக் கண்ணோடு கண்கொண்டு நோக்கும்போது, மனதுக்குள் வயலின் இசைப்பதும், ‘பத்தாப்பு ஃபெயில்’ பேர்வழிகூட எதுகை மோனையோடு கவிதை எழுதுவதும் நடக்கிறது. ‘கண்களால் அல்ல, மூளையால்தான் நாம் பார்க்கிறோம்’ என அறிவியல் சொன்னாலும், பார்த்த விழி பார்த்தவுடன் மூளை சிதறி, ‘குணா’ கமலாக உலாத்துவதற்குக் காரணம் கண்களின் விந்தைதான்!
சிக்கிமுக்கிக் கல் கையில் சிக்கும் வரை, மனிதன் சூரிய ஒளியில் மட்டுமே தன் வாழ்வைக் கட்டமைத்தான். கற்களின் உரசலில் உமிழ்ந்த வெளிச்சம், நாளடைவில் கார்பனும் பிற இழைகளும் உமிழும் வெளிச்சம் வரை வளர்ந்ததில், இரவு என்பது கடிகாரத்துக்கு மட்டும் என்றானது. அதுவும் சமீபத்திய விதவிதமான எல்.இ.டி வெளிச்சங்கள் ஒளிரும் துரித வாழ்வியலில், கண்கள் கணிசமான பாதிப்புகளை எதிர்கொள்கின்றன. எல்.இ.டி ஸ்க்ரீன் உடைய செல்போன் ஆகட்டும், டேப்லெட் கணினிகள் ஆகட்டும் ஒரு பல்பை நேரடியாகப் பார்த்துக்கொண்டிருப்பது போன்றதுதான் என நம்மில் பலருக்குப் புரிவது இல்லை.
‘என் புள்ளை அவனே பாஸ்வேர்டு போட்டுக்குவான்’, ‘குட்டிப் பாப்பா எப்படித்தான் கரெக்டா கேம்ஸைத் தட்டித் தட்டி விளையாடுறான்னே தெரியலை?’ என, கனிந்த ‘ஆப்பிளை’ச் சுவைக்க வேண்டிய குழந்தைகள் ‘மினி கணினி’ ஆப்பிளில் விளையாடுவதை மெச்சும் பெற்றோருக்கு ஓர் எச்சரிக்கை… குழந்தையின் கார்னியாவையும் ரெட்டினாவையும் எல்.இ.டி திரை தொடர்ச்சியாக உமிழும் ஒளிக்கற்றை பாதிக்கலாம். குறிப்பாக, அதன் ஊதா நிறம் உண்டாக்கும் அபாயம் குறித்த சர்ச்சை விவாதங்கள் உலகெங்கும் வலுத்துவருகின்றன.
மாட்ரிட் பல்கலைக்கழக ஆய்வு, ‘எல்.இ.டி ஸ்க்ரீன் வெளிச்சத்தால் கண்கள் பாதிப்படைவது உறுதி’ எனக் கூச்சலிட… இன்னொரு பக்கம், ‘அதெல்லாம் சும்மா… எல்.இ.டி ரொம்பப் பாதுகாப்பானது’ என சமாளிப்பிகேஷன் தட்டுகிறார்கள், டேப்லெட் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கண் மருத்துவர்கள். அவர்கள் பொய் சொன்னால் சாமி கண்களைக் குத்துமா என சத்தியமாகத் தெரியாது. ஆனால், 400 நானோ மீட்டருக்குக் குறைவான பாண்ட் அலகுடன் உமிழப்படும் கதிர்களால் கண்களின் கார்னியாவும் ரெட்டினாவும் வெப்பமாகி கண்களைக் குத்தும் என்ற எச்சரிக்கை மட்டும் உண்மை!
‘ஆமா… இப்படி என்ன செஞ்சாலும் பாதிப்புனு பயமுறுத்திட்டே இருங்க. கம்ப்யூட்டர் முன்னாடிதானே எனக்கு வேலை. நான் வேற என்னதான் பண்றது?’ எனக் கேட்போருக்கு சில உபாயங்கள். 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கணினித் திரையைவிட்டு பார்வையை விலக்கி தூரத்தில் உள்ள பொருட்களைப் பாருங்கள். கணினித் திரையை உற்று நோக்கிக் கொண்டிருக்கும்போது, கண்கள் இமைக்க மறக்கிறது. ஆகவே, 30 நிமிட இடைவெளியில் திரையைவிட்டு பார்வையை விலக்கி இமைப் பட்டாம்பூச்சிகளை சிறகடிக்க வைப்பது நலம். ஏனெனில், கண்களின் விழிப்படலங்கள் எப்போதும் கொஞ்சம் ஈரமாக இருக்க வேண்டும். கணினி வேலை அந்த விழிப்படலங்களை உலர்த்திவிடும். அடிக்கடி கண் சிமிட்டல்களோடு வெதுவெதுப்பான ஈரத் துணிகொண்டு கண்களைத் துடைத்து, புருவங்களை மசாஜ் செய்யுங்கள்!
நாகரிகத் தொட்டில் ஆட்டலில் மூக்குத்தி, தொப்புளுக்குத் தாவியது. கையில் குத்திய பச்சை, பற்களில் பதிந்தது. மேட்சிங் பிளவுஸ் நாகரிகம் மேட்சிங் உதட்டுச் சாயம் தாண்டி இப்போது மேட்சிங் கான்டாக்ட் லென்ஸ் வரை வந்து நிற்கிறது. கண்களின் கார்னியாவுக்கு ரத்தம் மூலம் ஆக்ஸிஜன் கிடைக்காது. அதனால்தான் உயிர் பிரிந்த பிறகும் கண்கள் மரிக்காமல், இன்னொருவருக்குப் பார்வை தருகின்றன. ஆனால், ஃபேஷன் என கலர் கலராக கான்டாக்ட் லென்ஸ் அணிவது, கார்னியாவின் செல்களைக் கொஞ்சம்
கொஞ்சமாகச் சிதைத்து, பார்வைத்திறனைப் பாதிக்கும். பார்வைக் குறைபாட்டுக்காக ஐந்தாறு ஆண்டுகளுக்கும் மேலாக கான்டாக்ட் லென்ஸ் அணிபவருக்கு கண் எரிச்சல், வெளிச்சத்தைப் பார்க்கும்போது ஏற்படும் கண் உறுத்தல் உண்டாவது இதனால்தான்.
ஆக, முடிந்தவரை கான்டாக்ட் லென்ஸ் தவிர்த்து அழகோடு அறிவாளி லுக்கும் தரும் மூக்குக் கண்ணாடிகளை அணிந்து பழகுங்கள்.
‘அம்மா… போர்டுல எழுதிப் போடுறது எனக்குச் சரியாவே தெரிய மாட்டேங்குது…’ என உங்கள் பிள்ளை சொன்னால், அது கண் பிரச்னையா, கணக்குப் பிரச்னையா எனத் தெரிந்துகொள்வது மிக முக்கியம். ‘ஹாரிபாட்டர்’ படம் ஏகத்துக்கும் ஹிட்டானதில், இன்று சும்மாங்காட்டியும் முட்டைக் கண்ணாடி போட்டு முழிக்க பல குழந்தைகளுக்குக் கொள்ளை ஆசை. அப்படியான குழந்தைகளுக்கு சிறுவயது முதலே உணவில் சில சமாசாரங்களைச் சேர்த்து விழித்திறனை ஆரோக்கியமாகப் பராமரிக்க வேண்டும்.
‘போன கண்ணும் திரும்பி வருமாம் பொன்னாங்கண்ணி கீரையாலே’ என்றொரு சொலவடை உண்டு. அந்த அளவு சத்தான அந்தக் கீரையைச் சமைத்துச் சாப்பிட சங்கடப்படக் கூடாது. நிறமிச் சத்துள்ள சிவப்பு பொன்னாங்கண்ணியும் சிறப்பானதே. இந்தக் கீரையை நல்லெண்ணெயில் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு குறைந்து கண் பார்வையைச் சீராக்க தேவையான பித்தத்தைச் சீர் செய்யும் என்கிறது சித்த மருத்துவம். இதில் பக்கவிளைவாக முடி போஷாக்காக வளரும். நெல்லிக்காய் பொடியை நீரில் குழைத்து, தலையில் தேய்த்துக் குளிக்கும்போது, கண்கள் குளிரும்; பார்வை துலங்கும் என்பது பாரம்பர்யப் புரிதல்.
‘மெட்ராஸ் ஐ’ பாதித்தால், அலறித் தெறித்து ஓடாமல், கீழாநெல்லிக் கீரையை மோரில் அரைத்துச் சாப்பிடுவதும் கீழாநெல்லிக் கீரையை எண்ணெயில் இட்டுக் காய்ச்சி அதை தலைக்கு வைத்துக் குளிப்பதும், ‘மெட்ராஸ் ஐ’யால் வரும் கண் எரிச்சலைக் குறைக்கும். இதை ‘மெட்ராஸ் ஐ’ பாதிக்காதவர்கள் வருமுன் காக்கும் நடவடிக்கையாகவும் மேற்கொள்ளலாம். கொத்துமல்லிக் கீரையை பச்சையாக சட்னியாக அரைத்துச் சாப்பிடுவது குழந்தைகளின் விழித்திறனை அதிகரிக்கும்.
கண்களுக்கு விட்டமின் ஏ-யின் பயனை, எல்.கே.ஜி முதலே ‘சி ஃபார் கேரட்’ என இங்கிலீஷ் துரைமார்களும் ஆசிரியர்களும் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால், கேரட்டைவிட பல்லாயிரம் மடங்கு அதிக கரோட்டினாய்டுகள் நமது முருங்கைக் கீரையில் இருப்பதை, நம்ம ஊர் பாட்டனி வாத்தியர்கள்கூட மறந்துவிட்டார்கள். காதலிக்கு ஆசையாகக் கொடுக்கும் வடிவத்தில் இல்லாததாலும், புறவாசலில் விளைவதாலும் கொஞ்சம் மதிப்பு குறைச்சலாகப் பார்க்கப்படும் பப்பாளியும் கண்களுக்கு பல நல்ல பலன்களை அளிக்கும். மிளகு போட்ட தினைப் பொங்கல், கேரட் தூவிய தினை ரவா கிச்சடி, முருங்கைக் கீரை குழம்பு போட்ட தினைச் சோறு… ஆகியவை அத்தனை கண்ணாளருக்குமான சிறப்பு உணவுகள்.
புலால் உணவில், மீன்கள் கண்களின் நண்பர்கள். வெள்ளாட்டு மண்ணீரல், கண் நோய் பலவற்றுக்கான மிகச் சிறந்த மருந்து. கண்களின் இமைகளில் அடிக்கடி வரும் கண்கட்டிக்கு நாமக்கட்டி போடுவது, கிருமி நாசினியாக இருந்து கட்டிகளை உடைத்து சீழ் வெளியேற்ற உதவும் நெடுங்கால மருந்து.
காதலையும் கோபத்தையும் மட்டும் அல்ல, உடல் ஆரோக்கியத்தையும் காட்டும் ஒரு கருவி கண்கள். அன்றைய தமிழ் மருத்துவர்கள், எண்வகைத் தேர்வுகளான நாடி, ஸ்பரிசம், நா, நிறம், மொழி, விழி, மலம், மூத்திரம் எனும் சோதனைகளில் விழிவழி நோய் அறிதலான கண்களைப் பார்த்து நோயைக் கணித்த வித்தை பிற உலகம் அதிகம் அறியாதது. தூங்கி எழுந்ததும் கண்கள் சிவந்திருப்பது உடலின் அதிசூடு, பித்த உயர்வு ஆகியவற்றின் அடையாளம். இவர்கள் ‘ரத்த அழுத்தம் சீராக உள்ளதா?’ என சோதிப்பது அவசியம். இப்படிச் சிவந்த, சற்று மஞ்சளான கண்கள் உள்ளோருக்கு அஜீரணம், வயிற்றுப்புண் வரும் வாய்ப்புகள் அதிகம்.
கண்களின் மருத்துவ விஷயங்கள் தாண்டி கண்கள் இல்லாத உலகம் பற்றி கண்டிப்பாக நாம் படித்து அறியவேண்டிய இலக்கியம் இரண்டினைப் பற்றி, சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் சமீபத்தில் சொன்னது நினைவுக்கு வருகிறது. வெளிச்சத்தில் பார்த்ததை இருட்டில் வரையும் மாபெரும் தமிழ் ஓவியன் மனோகர் தேவதாஸ், இருட்டில் செலவழித்த 20 ஆண்டுகளை வெளிச்சத்தில் சிலாகித்து எழுதும் தேனி சீருடையான் ஆகியோர் பற்றியே அவர் குறிப்பிட்டார்.
Retinitis Pigmentosa எனும் படிப்படியாகப் பார்வை இழப்பைத் தரும் கொடிய நோயில் பார்வையை இழந்துவரும் மனோகர் தேவதாஸ், தன் இளமைக்காலத்தில் வெளிச்சத்தில் பார்த்த வண்ணங்களால் சிலாகித்தவற்றை, இன்று இருட்டில் தன் தூரிகையில் வரைகிறார். அத்தனையும் பிரமிக்கவைக்கும் சித்திரங்கள். பிறப்பு முதலே பார்வையற்றவராக வறுமைச் சூழலில் பார்வையற்றோர் பள்ளியில் படித்து வந்த தேனி சீருடையான், அறுவைசிகிச்சை மூலம் அதிர்ஷ்டவசமாக மீண்டும் பார்வைபெற்றார். தான் இருட்டில் வாழ்ந்த நாட்களை ‘நிறங்களில் உலகத்தில்’ எனும் புத்தகத்தில் மிக அற்புதமாகப் பதிவுசெய்திருக்கிறார். இவர்கள் இருவரின் கண்களும், முகத்தில் இல்லை; அகத்தில் இருக்கின்றன. மிக அழகாக, அமைதியாக, ஆழமாக..!
நாம் மரிக்கும்போது நம்மோடு மண்ணில் புதைய வேண்டியது இல்லை நம் கண்கள். நமக்குப் பின்னும் இருட்டில் இருக்கும் இன்னொருவருக்கு, உலகத்தை உற்றுப்பார்க்க வாய்ப்பு அளிப்பவை. ஆகவே, அவற்றைக் கூடுதல் அக்கறையோடு பராமரிப்போம்!
-
கண்களைக் காக்கும் நலப் பழக்கங்கள்!
அடிக்கடி தலைக்குக் குளிப்பது கண்களுக்கு மிகவும் ஆரோக்கியம் தரும். அதிலும் எண்ணெய்க் குளியல் மிக அவசியம். நம் தாத்தா பாட்டிகளின் கண்ணாடியற்ற கழுகுப் பார்வைக்கு அதுதான் காரணம். குளித்து முடித்ததும், குறைந்தது 2-3 மணி நேரம் வரை தலையில் இருக்கும்படி எண்ணெய் வைப்பது முடியை மட்டும் அல்ல, கண்களையும் பாதுகாக்கும்.
இரவு நெடுநேரம் விழித்திருப்பது, பின்னிரவிலும் போர்வைக்குள் ‘வாட்ஸ்அப்’பில் கடலை வறுப்பது கண்களைக் கெடுக்கும் உத்திரவாதமான விஷயங்கள்.
அதிக பித்தம் உண்டாக்கும் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், நந்தியாவட்டம், தாமரை இதழ்களால் கண்களை மூடிக் கொள்வது இதம் அளிக்கும். இளநீரைக் கொண்டு கண்களைக் கழுவுவதும் கண் எரிச்சல் போக்கும். சித்த மருத்துவர்களிடம் கிடைக்கும் ‘இளநீர்க் குழம்பு’ எனும் கண்சொட்டு மருந்து கண் அயர்வுக்கும், ஒவ்வாமையால் வரும் கண் உறுத்தலுக்கும் நல்ல மருந்து.
காலை – மாலை இரு நேரங்களிலும் உள்ளங்கையை ஒன்றோடு ஒன்று நன்கு தேய்த்து உராய்வில் உருவாகும் வெம்மையை கண்களில் அழுத்திக் கொடுக்கலாம்.
இமைகளை மூடித் திறந்து, கண்களை மேலும் கீழும், பக்கவாட்டில் என உருட்டிச் செய்யும் பயிற்சியை தினமும் காலை, மாலை எனச் செய்ய வேண்டும்

Friday, 17 April 2015

12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்!

மேஷ ராசி: மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் !
ஷண்முகம் பார்வதீ புத்ரம்
க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்
தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்
வந்தே ஸிவாத் மஜம்
ரிஷப ராசி: ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.
ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை
ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ
மிதுன ராசி: மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:
கடக ராசி: கடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம:
சிம்ம ராசி: சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம:
கன்னி ராசி: கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.
ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம:
துலா ராசி: துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்
ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம:
விருச்சிக ராசி: விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
தரணி கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத் காந்தி ஸமப்ரதம்
குமாரம் சக்தி ஹஸ்தம்ச
மங்களம் ப்ரணமாம்யஹம்.
தனுசு ராசி: தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.
ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம:
மகர ராசி: மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:
கும்ப ராசி: கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.
ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம:
மீன ராசி: மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.
ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம:

நவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது?

நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும். அது எத்தனை சுற்று தெரியுமா?
சூரியன் - 10 சுற்றுகள்
சுக்கிரன் - 6 சுற்றுகள்
சந்திரன் - 11 சுற்றுகள்
சனி - 8 சுற்றுகள்
செவ்வாய் - 9 சுற்றுகள்
ராகு - 4 சுற்றுகள் அடிப்பிரதட்சிணம்
புதன் - 5, 12, 23 சுற்றுகள்
கேது - 9 சுற்றுகள்
வியாழன் - 3, 12, 21 சுற்றுகள்
------------------------
யோகம் தரும் நவக்கிரகங்கள்
1. சூரியன் - ஆரோக்கியம்
2. சந்திரன் - புகழ்
3. செவ்வாய் - செல்வச் செழிப்பு
4. புதன் - அறிவு வளர்ச்சி
5. வியாழன் - மதிப்பு
6. சுக்கிரன் - வசீகரத் தன்மை
7. சனீஸ்வரன் - மகிழ்வான வாழ்க்கை
8. ராகு - தைரியம்
9. கேது - பாரம்பரியப் பெருமைநவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது?

27 நட்சத்திரங்களில் பிறந்தோருக்கும் துன்பங்கள் தீர்க்கும் காயத்ரி மந்திரங்கள்



மன்மத வருஷம் மஹோன்னத வருஷம்- உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.
* அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்
* பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்
* கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்
* ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்
* மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்
* திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்
* புனர்பூசம்
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்
* பூசம்
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்
* ஆயில்யம்
ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்
* மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத்
* பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்
* உத்திரம்
ஓம் மஹாபகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்
* அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்
* சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்
* சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத்
* விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி தன்னோ விசாகா ப்ரசோதயாத்
* அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி தன்னோ அனுராதா ப்ரசோதயாத்
* கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்
* மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத்
* பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்
* உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்
* திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்
* அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்
* சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்
* பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
* உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
* ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்!

முன்ஜென்ம பாவங்களைப் போக்கும் ஆறு கோவில்கள்

* திருபுவனம் கம்பஹரேஸ்வரர் திருக்கோவில். கடன், சத்ரு, நோய் போன்றவற்றை தீர்க்கும் சக்தி வாய்ந்தது இந்த ஆலயம்.
* கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகில் உள்ள ராமநாதசுவாமி – பர்வதவர்த்தினி அம்மன் ஆலயம். இது மாந்தி பகவான் பரிகாரத் தலம் ஆகும்.
* திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோவில். ராகு– கேது பரிகாரத் தலம்.
* வைத்தீஸ்வரன் கோவில். இது செவ்வாய் பரிகார தலமாகும்.
* திருந்து தேவன்குடியில் உள்ள கற்கடகேஸ்வரர் கோவில். இது அனைத்து முன் ஜென்ம பாவங்களையும் போக்கும் திருத்தலம் ஆகும்.
* திருவிடைமருதூர் மகாலிங்கம் திருக்கோவில். பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் ஆலயம் இது

Thursday, 16 April 2015

சதுரகிரி மலை

சதுரகிரி மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும்.
நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையி...ல் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது.
இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள்.
சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.
திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.
தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்
* மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை "சஞ்சீவி மலை' என்கின்றனர்.
*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.
*ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.
* பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.
*இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.
*மகாலிங்கம் கோயிலின் வடக்கே "ஊஞ்சல் கருப்பண சாமி' கோயில் உள்ளது.
* சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.
* ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.
* சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.
இருப்பிடம்:
மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.
அல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் - செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி - கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி - அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது.
அங்கிருந்து தாணிப் பாறைக்கு - மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.
திறக்கும் நேரம்:
காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.போன்: 98436 37301, 96268 32131
மலைக்கு மேலே - சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் ' உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ - நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.
சதுரகிரி தல வரலாறு : சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.
வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.
சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார்.
சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.
சிவபெருமான் அவனை தேற்றி, "" நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும்.
மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.
இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.
இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.
கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.
இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.
இரட்டை லிங்கம்: ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.
""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள்.
அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.
பிலாவடி கருப்பு: வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், ""சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,'' என்றார்.
வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை "பிலாவடி கருப்பர்' என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.
பெரிய மகாலிங்கம்: நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை "பெரிய மகாலிங்கம்' என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
தவசிப்பாறை: மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது.
தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை "நவக் கிரக கல்' என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் "வெள்ளைப்பிள்ளையார்' பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.
சுந்தரமூர்த்தி
கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை' என்கின் றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது. அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.
பார்வதி பூஜித்த லிங்கம் :
சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும்
இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.
இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.
லிங்க வடிவ அம்பிகை
சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.
சதுரகிரியில் தீர்த்தங்கள்
சந்திர தீர்த்தம்
சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் 'சந்திர தீர்த்தம்' இருக்கிறது.இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.
கெளண்டின்னிய தீர்த்தம்.
சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.
கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ''பாவகரி நதி'' என்னும் பெயரும் உண்டு.
சந்தன மகாலிங்கம் தீர்த்தம்.
இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்' என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும்.
இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.
இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய 'திருமஞ்சனப் பொய்கை' உண்டு.
காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட 'பிரம்மதீர்த்தம்' ஒன்று சதுரகிரி மலைக்
காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது. இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட 'பொய்கைத் தீர்த்தம்'', ''பசுக்கிடைத் தீர்த்தம்'', 'குளிராட்டித் தீர்த்தம்' போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.
பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன.
அபூர்வ மூலிகைகள் :
இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.
பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.
தவிர கோரக்க முனிவரால் 'உதகம்' என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது.
இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் 'உதகம்' என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது.
விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக
பயன்படுத்த வேண்டும்.
சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.
இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.
அதேபோல் 'ஏர் அழிஞ்ச மரம்' என்றொரு மரம் உண்டு.
இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில்
வந்து ஒட்டிக்கொள்ளும்.
இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்' கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.
சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.
இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.
இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் - " மதி மயக்கி வனம்" என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர். நான் கேள்விப்பட்ட வரை , எங்கள் அருகில் இருக்கும் கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். "மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து" என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. எதுவும் கோவில் கூட இல்லை. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்.
இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் - சித்தர்கள், ரிஷிகள் - மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். ஏற்கனவே நாம் " கட்டை விரல் அளவில் காட்சி தந்த சித்தர் பற்றிய பதிவை வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம். இவை அத்தனையும் சர்வ நிஜம். இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் - மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்த சிவம் உங்களுக்கு அளிக்கும்.
உங்கள் தேடல் , பக்தி உண்மை எனில் - நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும். இதை நிறைய பக்தர்கள் அனுபவித்து இருப்பதால் , இப்போதெல்லாம் சதுரகிரியில் கூடும் கூட்டத்திற்கு குறைவில்லை..
சதுரகிரி மலை - ஒரு ஆன்மிக உலா
சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.
சித்தர்களின் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களின் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது.
சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.
இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

திருவிளக்கின் தத்துவம்

குத்து விளக்கு என்பது சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூா்த்திகளின் வடிவம். விளக்கின் அடிப்பகுதி பிரம்மா! நடுத்தண்டு விஷ்ணு, நெய் ஏந்தும் அகல் சிவன்! அதற்கு மேல் உள்ள பகுதி மகேஸ்வரன்! சிகரமாக உள்ள உச்சிப் பகுதி சதாசிவன்! விளக்கின் சுடா் லட்சுமி! ஒளி சரஸ்வதி! வெப்பம் பார்வதி ஆகும்.
திரு விளக்கில் உள்ள ஐந்து முகங்களும் நமது ஐம்புலன்களையும், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனப்படும் பஞ்ச பூதங்களையும் குறிக்கும் என்பது சிலா் கூறும் விளக்கம். விளக்கின் ஐந்து முகங்களும், சூரியன், சந்திரன், அக்கினி, சொல், உயிர் என்ற ஐந்தைக் குறிக்கும். பஞ்ச முகங்களிலும் உள்ள திரிகளைச் சுடர்விடச் செய்தால் ஆத்ம ஒளி உண்டாகும் என்பது யக்ஞ வல்கியா் கூறும் விளக்கம்.
குத்து விளக்கும் பெண்மையும்
***********************************
குத்து விளக்கில் இருக்கின்ற ஐந்து முகங்களும், பெண்களுக்கு இருக்க வேண்டிய ஐந்து முக்கிய குணங்களைக் குறிக்கும் என்பது சிலா் கூறும் விளக்கம். அவை: 1. அன்பு 2. மன உறுதி 3. நிதானம் 4. சமயோசித புத்தி 5. சகிப்புத் தன்மை ஆகியன.
விளக்கிற்கு ஏற்ற எண்ணெய்
பசு நெய் – லட்சுமி வாசம் செய்வாள், புத்திர பாக்கியம் கிட்டும்.
நல்லெண்ணெய் – சனியால் பீடிக்கப்பட்டோருக்குப் பரிகாரமாக அமையும். லட்சுமி அருள் கிட்டும்.
தேங்காய் எண்ணெய் – பலவிதமான தெய்வங்கள் வீட்டில் வாசம் செய்யும். கணவன் மனைவியரிடையே பாசத்தை உண்டாக்கும். பழம்பாவங்கள் நீங்கும்.
இலுப்பை எண்ணெய் – எல்லாப் பாவங்களும் போகும். மோட்சம் கிட்டும். நல்ல ஞானம் வரும். பிறவி நீங்கும்.
விளக்கு எண்ணெய் – தெய்வ அருள், புகழ், சுகம், உற்றார் சுகம், தாம்பத்திய சுகம் இவற்றை அதிகரிக்கச் செய்யும்.
வேப்ப எண்ணெய் – குல தெய்வத்தின் அருள் கிட்டும்.
முக்மூட்டு எண்ணெய் – நெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய் – ஆகிய மூன்றையும் கலந்து விளக்கேற்றி வர செல்வம் உண்டாகும். ஆரோக்கியம் தரும், இறை வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது.
விலக்க வேண்டியவை
கடலை எண்ணெய், பாமாயில், கடுகு எண்ணெய் முதலியனவை கூடாது.
விளக்கு ஏற்ற வேண்டிய திசைகள்
★*****-***★************************************
கிழக்குத் திசை நோக்கி விளக்கேற்றுவது சிறப்பு, துன்பங்கள் நீங்கும், கிரகங்கட்கு மகிழ்ச்சி ஏற்படும்.
மேற்குத் திசை நோக்கி விளக்கேற்றி வந்தால் கடன் தொல்லை நீங்கும். சனி கிரகத்திற்கு உவப்பு ஏற்படும், பகை நீங்கும்.
வடக்குத் திசை நோக்கி விளக்கேற்றி வந்தால் திருமணத்தடை, சுபகாரியத்தடை, கல்வித்தடை, வேலைவாய்ப்புத் தடை நீங்கும்.
தெற்குத் திசை நோக்கி எப்போதும் விளக்கேற்றக் கூடாது. அதனால் தீமைகளே ஏற்படும்.
விளக்குக்கு ஆசனம்
விளக்குகளை வெறும் தரையில் வைக்கக் கூடாது. அவற்றை வெள்ளி, செம்பு, பித்தளை, பஞ்ச லோகம் முதலியவற்றாலான ஒரு தாம்பாளத்தின் மீதே வைக்க வேண்டும். அல்லது மரத்தினாலான பலகையின் மீதாவது வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.
விளக்கு ஏற்றும் நேரம்
காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் விளக்கேற்ற வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் சா்வ மங்களயோகத்தைத் தரும்.
மாலை 6.00 மணி அளவில் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேலை, நல்ல கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம் ஆகியவை கிட்டும்.
காலையில் விளக்கேற்றும் போது உடல், மனம் சுத்தத்துடன் வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போட்ட பிறகே விளக்கேற்ற வேண்டும்.
மாலையில் விளக்கேற்றும் போது, வாசலில் தண்ணீா் தெளித்துக் கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.
காலை, மாலை விளக்கேற்றும் போது கொல்லைப் புறக் கதவைச் சாத்தி விட வேண்டும்.
விளக்கேற்றும்போது, விளக்கிற்குப் பால், கல்கண்டு, நிவேதனம் வைத்து வழிபட எல்லா நன்மைகளும் கிட்டும்.
எரியும் விளக்கைத் தூண்டும் முறை
விளக்கு எரியத் தொடங்கியவுடன் அந்த விளக்குக்குரிய தேவதை ஆவாகனமாகி விடுவதால், விளக்கு எரியும்போது அதன் திரியில் சிட்டத்தைத் தட்டுவதோ, திரியை நிமிண்டுவதோ கூடாது. திரியைப் பெரிதாக்கி வெளிச்சத்தைக் கூட்டலாம்.
நேரம் ஆக, ஆக விக்கின் ஒளி மங்கிக் கொண்டேவந்தால், எரிந்து கொண்டிருக்கும் திரியில் அருகே புதுத்திரி ஒன்றை ஏற்றிப் பின்னர் பழைய திரியை எடுத்துவிட வேண்டும்.
விளக்கைக் குளிர வைக்கும் முறை
************************************)
விளக்கேற்றினால், எண்ணெய் முழுவதும் தீர்ந்து விளக்கு தானாகவே அணையும் வரை விட்டு விடுகின்றனா். அது தவறு! விளக்கு ஏற்றியதிலிருந்து அதனைக் குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
விளக்கை வாயால் ஊதியோ, வெறுங்கையாலோ அணைக்கக் கூடாது. விளக்கைக் குளிர வைக்க வேண்டுமானால் திரியில் அடிப்பகுதியை பின்புறமாக இழுக்க வேண்டும். அப்போது தீச்சுடா் சிறிது சிறிதாகக் குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து விளக்கு குளிரும்.
எலுமிச்சம்பழ விளக்கு
எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழிந்துவிட்டு, அதன் தோலை விளக்குகளாக்கி அதில் நெய் விட்டு ராகு நேரத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடுவது உண்டு. இதனால் திருமணத் தடைகள் நீங்கி, திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
விளக்கின் திரி
*******************
பருத்திப் பஞ்சினால் ஆன திரி நல்லவை அனைத்தும் செய்யும்.
இலவம் பஞ்சினால் திரிக்கப்பட்ட திரி சகல பாக்கியங்களையும் தரும்.
தாமரைத் தண்டின் நூலால் திரிக்கப்பட்ட திரியானது முற்பிறவியில் செய்த பாவத்தைப் போக்கும். செல்வம் நிலைத்து நிற்கும்.
வாழைத் தண்டின் நாரினால் உருவாக்கப்பட்ட திரியைப் பயன்படுத்துவதால் குழந்தைச் செல்வம் உண்டாகும். தெய்வக் குற்றம் குடும்பசாபம் முதலியவை நீங்கிச் சாந்தி உண்டாக்கும். குலதெய்வக் குறைபாடு நீங்கும்.
வெள்ளை எருக்கன் பட்டையில் திரித்த திரியால் பெருத்த செல்வம் தரும். பேய் பிடித்தவர்கட்கு அதன் தொல்லைகள் நீங்கும்.
புது மஞ்சள் சேலைத் துண்டால் செய்யப்பட்ட திரி – அம்மன் அருள் கிட்டும். வியாதிகள் குணமாகும் காற்றுச் சேட்டைகள் நீங்கும்.
சிவப்பு நிறச் சேலைத் துண்டினால் திரிக்கப்பட் திரி திருமணத் தடை நீங்கும். மலட்டுத் தன்மை நீங்கும். பிசாசுத் தொல்லை செய்வினை தோஷங்கள் விலகும்.
பன்னீா் விட்டுக் காயவைத்த புது வெள்ளைத் துணியினால் திரிக்கப்பட்ட திரி – உத்தம பலன்கள் அத்தனையும் கிடைக்கும்.
விளக்கு பூஜைக்கு ஏற்ற நாட்கள்
***********************************
வெள்ளிக் கிழமை
கார்த்திகை, திருவாதிரை, பூரம், விசாகம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள்
பௌர்ணமி
அமாவாசை
சதுர்த்தி திதி
பஞ்சமி திதி
ஏகாதசி திதி
நவராத்திரி
சிவராத்திரி
10. ஆடிச் செவ்வாய்
11. ஆடி வெள்ளி
12. தைச் செவ்வாய்
13. தை வெள்ளி
ஆகிய நாட்கள் பூஜைக்கு ஏற்ற நாட்கள்
வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் கூட்டுவழிபாடாக விளக்கு பூஜை செய்வது மிகுந்த நன்மையைத் தரும்.
விளக்கு பூஜையில் கவனிக்க வேண்டியவை
விளக்கு பூஜையில், விளக்கிற்கு அர்ச்சனை செய்த குங்குமத்தை எடுத்து சுமங்கலிகள் தாலியிலும், தரை உச்சி வடுகிலும் வைத்துவர அவா்களது கணவா்கள் நலமுடன் வாழ்வார்கள்
திருவிளக்குப் பூஜை செய்யும் போது குத்து விளக்கைத் தலை வாழை இலை மீது வைத்துப் பூசை செய்ய வேண்டும். அதனால் அந்தக் குடும்பம் வாழையடி வாழையாகச் செழிப்புற்று ஓங்கும்.
விளக்கின் சுடா் நிதானமாக எரிய வேண்டும். நடுங்கக் கூடாது. புகையக் கூடாது. மெல்லத் தணிந்து அடங்கக் கூடாது.
விளக்கில் குளம் போல எண்ணையை ஊற்றித் தீபம் ஏற்ற வேண்டும்.
விளக்கின் சுடரில் மகாலட்சுமி நிறைந்து நிலைத்து, நிற்கின்ற காரணத்தால், அச்சுடரைக் கையாலும், கையால் வீசிய காற்றாலும், வாயால் ஊதியும் குளிர வைப்பது குற்றமாகும்.
அதிகாலையில் எழுந்ததும் பூஜை அறையில் குத்துவிளக்கு, அல்லது காமாட்சி விளக்கு ஏதேனும் ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும்.
விளக்கு என்பது லட்சுமி வாசம் செய்யும் இடம். அது மங்கலச் சின்னம். உங்கள் வீடு பிரகாசமாக இருக்க வேண்டின் எப்போதும் விளக்கும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
அடுப்பேற்று முன்பாக
**********************************-*****************
சுமங்கலிப் பெண்கள் காலையில் குறித்துவிட்டு, காமாட்சி விளக்கேற்றியோ, ஓம் சக்தி விளக்கேற்றியோ வழிபட்டு, அதிலிருக்கும் தீப ஒளியைக் கொண்டு அடுப்பேற்றி வர சகல நன்மைகள் ஏற்படும்.
விளக்கேற்றியவுடன் செய்யக் கூடாதவை
விளக்கேற்றிய பிறகு தலை சீவக் கூடாது.
வீட்டைப் பெருக்கக் கூடாது.
விளக்கேற்றியவுடன் சுமங்கலிப் பெண் வெளியே செல்லக் கூடாது.
விளக்கேற்றியவுடன் சாப்பிடக்கூடாது.
விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக் கூடாது.
விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவை கொடுக்கக் கூடாது.
விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது.
விளக்கேற்றி விட்டு உடனே தலை குளிக்கக் கூடாது.
மேற்கண்டவாறு செய்தால் வீட்டில் லட்சுமி வாசம் செய்ய மாட்டாள். அதனால் தரித்திரமே குடிபுகும்.